null
சளி, இருமலின்போது அன்னாசி பழம் சாப்பிடலாமா?
- இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
- மஞ்சளில் குர்குமின் சத்து உள்ளது.
காய்ச்சலுக்கு...
பருவ நிலை மாறும்போது சளி, இருமல் போன்ற நோய் பாதிப்புகளுக்கு பலரும் ஆளாவதுண்டு. அப்போது நோயை எதிர்த்து போராடவும், தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை உடலில் இருந்து அகற்றவும் உடல் உறுப்புகள் முயற்சிக்கும். உதாரணமாக ஒருவர் தும்மும்போதோ அல்லது இருமும்போதோ உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை வெளியேற்றி, நோய் பாதிப்பை கட்டுப்படுத்த போராடும். அப்போது நாம் செய்ய வேண்டிய இயற்கை மருத்துவம் குறித்து காண்போம்...
காய்ச்சல் காரணமாக உடல் வெப்பநிலை அதிகரிக்கும் சமயங்களில் ஓரளவு சூடான நீரில் கால்களை மூழ்க வைக்கலாம். கால்கள் தாங்கிக்கொள்வதற்கு ஏதுவான சுடுநீரில் குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் வரை கால்களை மூழ்க வைக்கலாம். சுடு நீரில் பருத்தி துணியை நனைத்து வெதுவெதுப்பான பதத்தில் நெற்றியில் ஒத்தடம் கொடுத்தும் உடலின் வெப்பநிலையை குறைக்கலாம். இந்த சிகிச்சை முறைகளை மருத்துவ ஆலோசனை பெற்றுமுறையாக மேற்கொள்ள வேண்டியது முக்கியமானது.
இருமலுக்கு....
தேனில் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளன. அவை இருமலை கட்டுப்படுத்த உதவும். தொண்டைக்கு இதமளிக்கும். வெதுவெதுப்பான நீர் அல்லது மூலிகை தேநீரில் தேன் சேர்த்து பருகலாம். குறிப்பாக தூங்க செல்வதற்கு முன்பு குடிப்பது பலனளிக்கும்.
சளிக்கு...
இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது மூக்கடைப்பு ஏற்படுவதை தடுக்கும். தொண்டை வலியை குணப்படுத்த உதவும். சளி, இருமலை கட்டுப்படுத்தவும், உடலின் வெப்பநிலையை பராமரிக்கவும் உதவும்.
இஞ்சி துண்டை பொடித்து நீரில் கொதிக்க வைத்து அதனுடன் எலுமிச்சை சாறு அல்லது தேன் கலந்து பருகலாம். தினமும் 2-3 முறை குடிப்பது பலன் தரும்.
மூக்கடைப்புக்கு...
தண்ணீரை கொதிக்க வைத்து, அகன்ற கிண்ணத்தில் ஊற்றி, சில துளிகள் யூகலிப்டஸ் எண்ணெய்யை சேர்க்கவும். துண்டு கொண்டு தலையை மூடி ஆவி பிடிக்கவும். இந்த நீராவியை 5-10 நிமிடங்கள் உள்ளிழுக்கவும். இதனை தினமும் இரண்டு அல்லது மூன்று முறை செய்யலாம். மூக்கடைப்பு நீங்கும். மூக்கில் சளி சேருவது கட்டுப்படும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க...
மஞ்சளில் குர்குமின் சத்து உள்ளது. இது சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. ஒரு டம்ளர் சூடான பாலில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து, தூங்குவதற்கு முன்பு குடிக்கலாம்.
இரண்டு, மூன்று நாட்கள் கடந்தும் சளி, இருமல் கட்டுக்குள் வரவில்லை என்றால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமானது.
சளி, இருமலின்போது அன்னாசி பழம் சாப்பிடலாமா?
அன்னாசி பழத்தில் புரோமெலைன் என்னும் நொதி உள்ளது. இந்த நொதி சளி, இருமலுடன் தொடர்புடைய வீக்கத்தை குறைக்க உதவும். குறிப்பாக சுவாச பாதையில் படிந்திருக்கும் சளியை அப்புறப்படுத்திவிடும் ஆற்றல் கொண்டது. மேலும் அன்னாசி பழத்தில் வைட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். எனினும் அன்னாசி பழம் அதிக அமிலத்தன்மை கொண்டது என்பதால் சிலருக்கு தொண்டையில் எரிச்சலை உண்டாக்கும். தொண்டையில் எரிச்சலை உணர்ந்தால் அன்னாசி பழத்தை குறைவாக சாப்பிடலாம் அல்லது தவிர்த்து விடலாம்.