பெண்கள் உலகம்
நெய்

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க உதவும் நெய்

Published On 2021-01-24 10:00 IST   |   Update On 2021-01-23 14:01:00 IST
அன்றாட உணவில் நெய் சேர்த்துக்கொள்வது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க உதவும். நெய்யில் ஆரோக்கியமான அமிலம் மற்றும் வைட்டமின் பி 2, பி 12, பி 6, சி, ஈ உள்ளிட்ட பிற ஊட்டச்சத்துக்களும் கலந்திருக்கின்றன.
அன்றாட உணவில் நெய் சேர்த்துக்கொள்வது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க உதவும். நெய்யில் ஆரோக்கியமான அமிலம் மற்றும் வைட்டமின் பி 2, பி 12, பி 6, சி, ஈ உள்ளிட்ட பிற ஊட்டச்சத்துக்களும் கலந்திருக்கின்றன. ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்களும் உள்ளன. இவை மூளை, இதயம், நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். நெய்யில் கொழுப்பு கலந்திருந்தாலும் சமைப்பதற்கு பயன்படுத்தப்படும் மற்ற எண்ணெய்களை விட சிறந்ததாக கருதப்படுகிறது. வயதுக்கு ஏற்ப உணவில் நெய் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியமானது.

எந்தெந்த வயதினர் எவ்வளவு நெய் எடுத்துக்கொள்ளலாம் என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் சில பரிந்துரைகளை வழங்கி இருக்கிறார்கள். அதன்படி பருவ வயதை எட்டிய ஆண்களும், பெண்களும் தினமும் 2 தேக்கரண்டி நெய் சாப்பிடலாம். கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தின மும் 3 தேக்கரண்டி நெய் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

7 மாதம் முதல் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 2 முதல் 3 தேக்கரண்டி வரை நெய்யை உணவில் சேர்த்துக்கொடுக்கலாம். 3 முதல் 9 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் அதே அளவில் வழங்கலாம். 10 முதல் 17 வயதுக்குட்பட்ட இளம் பருவத்தினருக்கு 4 தேக்கரண்டி நெய்யும் கொடுக்கலாம். 6 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நெய் கொடுக்கக்கூடாது. தாய்ப்பால் மட்டும்தான் கொடுக்க வேண் டும்.

பசுவின் நெய் நல்லதா? எருமை நெய் நல்லதா? என்ற விவாதம் காலம்காலமாக நடந்துகொண்டிருக்கிறது. இரண்டு நெய்களும் உடல் நலத்திற்கு நலம் சேர்ப்பவைதான். என்றாலும் பசு நெய் பல்வேறு வகைகளில் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. தொடர்ந்து பசு நெய் உட்கொள்வது கொழுப்பை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என்ற கருத்து நிலவுகிறது. மேலும் உடலில் புற்றுநோய் செல்கள் வளர்வதற்கு அனுமதிக்காது. ஒற்றைத்தலைவலியால் அவதிப்படுபவர்களுக்கு பசு நெய் சிறந்தது.

இதில் வைட்டமின்-கே காணப்படுகிறது. இது ரத்த அணுக்களில் கால்சியம் படிவதை தடுக்க உதவும். நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் வலுப்படுத்தும் தன்மை கொண்டது. நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களுக்கு எதிராக போராடும் வலிமையை அதிகப்படுத்தும்.

எருமை நெய்யில் வைட்டமின்-ஏ நிறைந்திருப்பதால் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இந்த நெய்யில் ஆன்டி ஆக்சிடென்டுகள் வடிவில் கரோட்டினாய்டுகள் உள்ளன. எருமை நெய் உட்கொள்வதன் மூலம் மாஸ்குலர் சிதைவு மற்றும் கண்புரை ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கலாம். இருப்பினும் இதனை விட பசு நெய்யை அதிகம் எடுத்துக்கொள்வது சிறப்பானது என்பது ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

“பசு நெய் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்த உதவும். அதன் மூலம் எடை குறைப்புக்கு வழிவகுக்கும். மேலும் இது குறுகிய மற்றும் நடுத்தர கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளது. அவை குடல், எலும்புகள், முடி, சருமம் மற்றும் மூட்டுகள் என உடலின் பல்வேறு பாகங்களின் ஆரோக்கியத்தை மேம் படுத்தக்கூடியவை. உடலில் உள்ள நச்சுக்களை அழிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்” என்கிறார்கள்.

Similar News