லைஃப்ஸ்டைல்

புகையும் சர்க்கரையும் இணைந்தால் பேராபத்து

Published On 2018-06-26 02:48 GMT   |   Update On 2018-06-26 02:48 GMT
புகைபிடிக்காதவர்களை ஒப்பிடும் போது புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கு 45 சதவீத வாய்ப்புகள் அதிகம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு புகைப்பழக்கம் உடல்ரீதியாக பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். புகைபிடிக்காதவர்களை ஒப்பிடும் போது புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கு 45 சதவீத வாய்ப்புகள் அதிகம். புகைப்பழக்கம் உள்ளவர்களின் வயிற்றில் கொழுப்பு குறிப்பாக ஆண்களுக்கு சேகரமாகும். அதனால் இயற்கையான இன்சுலின் சுரப்பு குறையும். பெண்கள் கர்ப்பக்காலத்திலும், பேறுகாலத்திற்குப் பிறகும் நிகோடின் உடலில் சேர்வதால் பி செல் குறைபாடும் நீரிழிவும் ஏற்படுகிறது.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 50 முதல் 60 சதவீதம் பேர் புகைபிடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். புகையிலை நிறுவனங்கள் தொடர்ந்து தீவிரமாக விளம்பரங்களை வெளியிடும் வரையில் இந்தியாவில் புகைபிடிப்பவர்கள் குறையப்போவதில்லை. உலகிலேயே இந்தியாதான் புகையிலைப் பொருட்களை தயாரிப்பதிலும் பயன்படுத்துவதிலும் 2-ம் இடத்தில் உள்ளது. 40 சதவீதம் பேர் இந்தியாவில் பீடி புகைக்கிறார்கள். புகைபிடிக்கும் ஒரு நீரிழிவு நோயாளியின் இதயம் மற்றும் தமனியின் ஆரோக்கியம், மற்ற புகைபிடிப்பவரை விட 2 மடங்கு அதிக பாதிப்புக்குள்ளாகிறது. நீரிழிவு பாதிப்புக்குள்ளானவர்கள், நீரிழிவு நோயைத் தடுக்க நினைப்பவர்கள் இருதரப்பினருமே புகைபிடிப்பதை கைவிடவும், குறைக்கவும் முயல வேண்டும். புகை பிடிக்கும் ஒருநபர் தாமாகவே முன்வந்து புகைபிடிப்பதை நிறுத்துவதே முதல் முயற்சியாக இருக்கும்.

நீரிழிவு நோய் சத்தமில்லாமல் கொல்லும் தன்மை கொண்டது. ஏனென்றால் கண்கள், சிறுநீரகம், பாதம், நரம்புகளை அது பாதிக்கும் தன்மை கொண்டது. எதிர்பாராதவிதமாக, பல நீரிழிவு நோயாளிகள், இந்தப் பிரச்சினைகள் அவர்களைத் தாக்க ஆரம்பித்தவுடன்தான் அந்நோயையே கண்டுபிடிக்கிறார்கள்.

நீரிழிவு நோயை மோசமாக மேலாண்மை செய்வதால், எதிர்காலத்தில் சந்திக்கப் போகும் பிரச்சினைகள்:- கட்டுப்படுத்தப்படாத ரத்த சர்க்கரை கண்ணின் உள்படலத்தை, குறிப்பாக விழித்திரையை பாதிக்கும். இந்த நிலைக்கு டயாபடிக் ரெட்டினோபதி என்று பெயர். டயாபடிக் ரெட்டினோபதியின் ஆரம்ப நிலைகளில் எந்த நோய் அறிகுறியும் தெரியாது. உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறது என்றால், ஆண்டுக்கு ஒரு முறையாவது உங்கள் கண்களை பரிசோதித்துக் கொள்வது அவசியம்.

உடல்உறுப்புகளுக்கு செல்லும் நரம்புகளுக்கு நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படுத்துவது “டயாபடிக் நியூரோபதி“. இதன் காரணமாக கை, பாதங்கள் மரத்துப் போதல் அல்லது ஜிவுஜிவு உணர்வு போன்றவை ஏற்படலாம். கால்களில் இருந்து நமக்குத் தெரியாமலேயே செருப்பு நழுவிப் போதல் அல்லது பாலுணர்வு படிப்படியாக குறைதல் போன்றவை இதன் பொதுவான அறிகுறிகளாகும். மோசமான நியூரோபதி, பாதங்களுக்கு ரத்தவோட்டத்தை குறைத்து, உயிருக்கு உலை வைக்கும்.
Tags:    

Similar News