உடற்பயிற்சி

தியானம் என்றால் என்ன...? மனதை கட்டுப்படுத்தாமல் எப்படி தியானம் செய்வது...?

Published On 2024-03-18 07:00 GMT   |   Update On 2024-03-18 07:00 GMT
  • தியானத்தில் 2 நிலைகள் உள்ளன.
  • நூற்றுக்கணக்கான நினைவுகள் நம் கண்முன்னே தோன்றும்.

தியானத்தின் நோக்கம் தியானிக்கப்படும் பொருளின் தன்மையை அறிந்து கொள்ளுல் ஆகும். அதற்கு மனம் ஒரு கருவியாக பயன்படுகிறது. தியானத்தில் 2 நிலைகள் உள்ளன.

நம் மனதில் ஏதாவது ஒரு உருவத்தை குறித்தோ அல்லது ஒரு கருத்தை குறித்தோ தொடர்ந்து சிந்தனை செய்வது. மனதில் இருந்து எல்லாவிதமான எண்ணங்களையும் அகற்றிவிடுதல். முதல் நிலையில் ஏதாவது ஒரு பொருளின் மீது அல்லது குரு புகட்டிய ஒரு மந்திரத்தை உச்சரிக்கத் தொடங்குகிறோம். அப்போது நமக்கு ஒரு புதுமையான அனுபவம் உண்டாகும்.

இதுவரை நம் மனதில் புதைந்து உறங்கிக் கிடந்த நூற்றுக்கணக்கான நினைவுகள் நம் கண்முன்னே தோன்றும். நமக்கு இது சிக்கலாக கூட இருக்கும். அதற்கும் வழி இருக்கிறது. நாம் உச்சரிக்கும் மந்திரத்தை அதன் பொருள் உணர்ந்து அப்பொருளின் பாவத்துடன் நம்மை அதில் பிணைத்துக் கொண்டால், நாம் தியான நிலையை அடையமுடியும். மற்ற நினைவுகள் எல்லாம் மறந்து போகும்.

இரண்டாம் நிலையில், எவ்வித இடர்பாடுகளும் இல்லாமல், அமைதியாக உட்கார்ந்து கொள்ள வேண்டும். கண்களை மூடிக்கொள்ள வேண்டும். கால் முதல் தலை வரை எல்லா உறுப்புகளும் ஓய்வில் இருக்க வேண்டும். காதுகள் திறந்திருந்தால், வெளியில் உள்ள சத்தங்கள் இடையூறு செய்யும்.

மனதில் இருந்தும் பல எண்ணங்கள் எழும். நாம் அதை பொருட்படுத்த தேவையில்லை. வேடிக்கை பார்ப்பவரை போல நாம் ஒதுங்கி நிற்க வேண்டும். அப்போது நம் காதுகள் திறந்திருந்தாலும் எவ்வித இடர்பாடுகளும் இருக்காது. தியானம் செய்தவன் மூலம் நம்மை நாம் உணர முடியும்.

 மனதை கட்டுப்படுத்தாமல் எப்படி தியானம் செய்வது...?

முதுகுத்தண்டு வளையாது நிமிர்ந்திருந்து கொண்டு இருக்க வேண்டும். மனதைக் கட்டுப்படுத்தாமல் எண்ணங்களை மனதின் வழியே சுதந்திரமாக விடுங்கள். என்னென்ன எண்ணங்கள் மனதில் உண்டாகின்றதோ அவற்றை முக்கியப்படுத்தாது அப்படியே விடுங்கள்.

மனதில் நல்ல எண்ணங்கள் மட்டுமன்றி தீய எண்ணங்களும் ஏற்படலாம். தீய எண்ணங்களை கட்டுப்படுத்த வேண்டுமென்று அவசியமில்லை. அதனை அதன்படியே விட்டுவிட வேண்டும். இவ்வளவு கெட்ட எண்ணங்கள் இருந்ததா என்று எண்ணும் போது நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இதேபோன்றே நல்ல எண்ணங்களும் உருவாகும்.

இவ்வாறு தினமும் பல்லாயிரக் கணக்கான எண்ணங்கள் மனதில் தோன்றி இறுதியில் எண்ணுவதற்கு எண்ணங்கள் இல்லாத நிலையில் தாமாகவே எண்ணங்கள் குறைந்து கொண்டே வந்து இறுதியில் மனம் அமைதியடையும்.

தியானம் செய்ய ஆரம்பித்த பின்னர் அவசியமற்றவர்களின் தொடர்புகளை விட்டுவிடுவதோடு மனதைக் குழப்பும் காரியங்களிலும் ஈடுபடாதிருப்பது நலம் பயக்கும்.

Tags:    

Similar News