லைஃப்ஸ்டைல்

‘அக்வா’ ஆசனம் எனப்படும் நீரடி ஆசனம்

Published On 2019-06-08 06:07 GMT   |   Update On 2019-06-08 06:07 GMT
யோகாசனத்தில் புத்துணர்வூட்டும் புதிய பிரிவாக பிறந்திருக்கிறது, ‘அக்வா’ ஆசனம் எனப்படும் நீரடி ஆசனம். இந்த ஆசனத்தை பற்றி விரிவாக பார்க்கலாம்.
யோகாசனத்தில் புத்துணர்வூட்டும் புதிய பிரிவாக பிறந்திருக்கிறது, ‘அக்வா’ ஆசனம் எனப்படும் நீரடி ஆசனம். நாட்டின் உயர்தர நலவாழ்வு மையங்களிலும், ரிசார்ட்களிலும் இந்த ஆசனத்தில் மக்கள் ஆர்வத்தோடு ஈடுபடத் தொடங்கியிருக்கிறார்கள்.

தண்ணீருக்குள் நின்றபடி உடலின் மேற்பகுதி தண்ணீருக்கு வெளியே இருக்கும் படியும், சில வேளைகளில் முழுமையாக தண்ணீருக்குள் மூழ்கி மூச்சடக்கியும் இந்த தண்ணீர் ஆசனம் மேற்கொள்ளப்படுகிறது. தண்ணீரின் மீது மிதக்கும் பலகையிலும் ஆசனம் செய்கிறார்கள்.

கடல் நீர் நிரப்பிய நீச்சல் குளங்கள், வெந்நீர் நிரப்பிய குளியல் தொட்டிக்குள் இந்த தண்ணீர் ஆசனங்களைச் செய்கின்றனர். இதை முடித்து வெளியே வரும் போது, உடல், மனம், உணர்வு எல்லாமே புத்துணர்ச்சி பெறுவதாகக் கூறுகிறார்கள். வழக்கமாக தரையில் ஒரு விரிப்பில் அமர்ந்து செய்யப்படும் யோகாசனமே இப்படி தண்ணீருக்கடியிலும் செய்யப்படுகிறது.

யோகாசனத்தில் நன்கு தேர்ச்சி பெற்ற வர்களும், புதிதாக அதில் ஈடுபடுபவர்களும் தண்ணீர் ஆசனத்தை மேற்கொள்ளலாம். இதில் ஈடுபடுபவர்கள், தண்ணீரின் நலமளிக்கும் தன்மையை அனுபவப்பூர்வமாக உணரலாம்.

தண்ணீருக்குள் சூரிய நமஸ்காரம், விருக்‌ஷாசனம், அர்த்த சக்கராசனம், தனுராசனம் ஆகியவை பெரும்பாலும் செய்யப்படுகிறது. சூரிய நமஸ்காரமானது ஒட்டுமொத்த உடம்பின் வலுவையும் ஒழுங்கையும் கூட்டுகிறது. விருக்‌ஷாசனம் நிலைத்தன்மையையும், நெகிழ்வுத்தன்மையையும், அர்த்த சக்ராசனமானது முதுகெலும்பு மற்றும் பின்பகுதித் தசைகளுக்கு நெகிழ்வுத்தன்மையையும், தனுராசனம் உடம்பின் மேற்பகுதியை வளைத்து, தோள்பட்டைகளை வலுப்படுத்தவும், முதுகெலும்பு நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும் உதவுகிறது என்கிறார்கள். வீரபத்ராசனமும் தண்ணீருக்குள் அதிகம் மேற்கொள்ளப்படுகிறது.

வழக்கமாக தரையில் மேற்கொள்ளும் ஆசனத்தைவிட இதில் எடை குறைவாக உணரலாம். உடம்பின் சமச்சீர் நிலையை மேம்படுத்த இது கைகொடுக்கிறது. தண்ணீரின் அழுத்தமானது நுரையீரல்களை விரிவாக்க உதவுகிறது. அதனால் நாம் அதிகமான ஆக்சிஜனை உள்ளிழுக்க முடிகிறது.
Tags:    

Similar News