லைஃப்ஸ்டைல்
குழந்தைகளின் கைப்பேசி விளையாட்டு போதை

குழந்தைகளின் கைப்பேசி விளையாட்டு போதை

Published On 2019-07-24 05:04 GMT   |   Update On 2019-07-24 05:04 GMT
மொபைல் கேம் என்ற போலி விளையாட்டு விபரீதமானது. அது உங்கள் நிகழ்காலத்தை கொல்லும். எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும்.
வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் ஏதேனும் செய்திகள் வந்துள்ளதா என்று அடிக்கடி செல்பேசியை திறந்து பார்ப்பதே ஒரு கட்டாயச் செயலாகிவிட்டது. இந்தப் பழக்கத்திலிருந்து விடுபடவே முடியாது போலிருக்கிறது.

கடமையாற்ற வேண்டிய அலுவலர்கள் கூட கைப்பேசியை உற்றுப்பார்த்துக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. அங்காடி, பஸ், பஸ் நிலையம், ரெயில், ரெயில் நிலையம் என்று எல்லா இடத்திலும் இதுதான் நடக்கிறது. பள்ளிகளில் செல்பேசியை எடுத்துச்செல்ல தடை உள்ளது. ஆனாலும் சில மாணவர்களிடம் செல்பேசிகள் உள்ளன. சிறைச்சாலைக்குள் கைப்பேசிகள் இருப்பதைப் போலத்தான் தடை செய்யப்பட்ட பள்ளி விடுதியிலும் கைப்பேசிகள் உள்ளன. சில வேளைகளில் பெற்றோர்களே ரகசியமாக பிள்ளைகளுக்கு கொடுத்துவிடுகிறார்கள்.

மாணவர்களைப் பொறுத்தவரை கம்ப்யூட்டரில் விளையாடிய விளையாட்டை இப்போது கைப்பேசியில் விளையாட வசதி வந்துவிட்டது. இதனால் இளைஞர்கள் கைப்பேசியில் தீவிரமாக புகுந்து விளையாட ஆரம்பித்துவிட்டார்கள். இது ஒரு வகை போதை. இந்த போதைக்கு அடிமையானவர்களுக்கு தினசரி கடமைகளை செய்து முடிக்க முடியாமல் போய்விடுகிறது. காலப்போக்கில் எந்த தொழிலையும் செய்து முடிக்கும் திறமையும், மனமும் இல்லாமல் போய்விடுவதால் அந்த இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுகிறது.

கைப்பேசி விளையாட்டுகள் சிலிர்ப்பையும், நடுக்கத்தையும், திகிலையும், ஆனந்தத்தையும் ஏற்படுத்துகிறது. இளைஞர்களை கவர்ந்து ஈர்க்கும் விதமாகத்தான் விளையாட்டுகளை சுவாரசியமாக வடிவமைத்திருக்கிறார்கள். வளர் இளம் பருவத்தினர் தேடும் புதுமை, சாகசம், திரில், வெற்றியுணர்வு போன்றவை இந்த விளையாட்டில் கிடைக்கிறது. பாலியல் உணர்வு, பலாத்கார உணர்வு போன்றவை தூண்டப்பட்டு மகிழ்ச்சி ஹார்மோன்கள் சுரக்கப்பட்டு உடல் முழுவதும் அது உற்சாக தீயாக பரவுகிறது.

எனவேதான் இந்த கம்யூட்டர் விளையாட்டை விட்டுப் பிரிய மனமில்லாமல் மாணவர்கள் பல மணிநேரம் அதிலே விழுந்துகிடக்கிறார்கள். இவர்கள் இரவு முழுவதும் இந்த மாய விளையாட்டில் முடங்கிக் கிடப்பதால் பகலில் அவர்களால் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ செல்ல முடிவதில்லை. சென்றாலும் அங்கேயே தூங்கிவிடுகிறார்கள். பாடங்களில் இவர்கள் சாதாரணமாக தோற்றுவிடுகிறார்கள். அதைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதும் இல்லை. இந்த சூழ்நிலையில்தான் பெரும்பாலும் பெற்றோர்கள் விழித்துக்கொள்கிறார்கள்.

கல்லூரிகளிலிருந்தும் பெற்றோர்களுக்கு தகவல் வந்துள்ளது. அதில் இப்போது ‘பப்ஜி’ என்ற ஆன்லைன் விளையாட்டுதான் பெருவாரியாக மாணவர்கள் விளையாடும் கம்ப்யூட்டர் விளையாட்டு என்றும், 40 கோடி இளைஞர்கள் உலகளவில் விளையாடுகிறார்கள் என்றும், அதில் 8 கோடி பேர் இந்தியர்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்கள். இது தடை செய்யப்பட்ட ஒரு கம்ப்யூட்டர் விளையாட்டு. ஆனால் இளைஞர்கள் எந்த தடையுமின்றி விளையாடுகிறார்கள். இதற்கு முன்னர் தடை செய்யப்பட்ட ‘ப்ளு வேல்’ என்ற விளையாட்டால் பல இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்டதையும் சிலர் பெற்றோர்களை கூட கொலை செய்ததையும் நாம் கேள்விப்பட்டோம்.

இன்று கிட்டத்தட்ட எல்லா கைப்பேசியிலும் இந்த விளையாட்டுகளை விளையாடலாம். சராசரி இந்தியன் ஒரு மணி நேரம் விளையாடும் அளவிற்கு கைப்பேசி விளையாட்டு வளர்ந்துவிட்டது. அதாவது எல்லாரும் விளையாடவில்லை என்றாலும் ஒரு சிலர் பல மணிநேரங்கள் விளையாடுகிறார்கள் என்பது அதன் பொருள். விளையாடும் நபர் தினமும் 2 முறையாவது விளையாடுகிறார்கள். இந்தியாவில் 25 கோடி மக்கள் இந்த கைப்பேசி வீடியோ விளையாட்டு விளையாடி உலகில் முதல் ஐந்து இடத்தில் நாம் இருக்கிறோம்.

நான் குறிப்பிட்ட பப்ஜி என்ற ஆபத்தான விளையாட்டு கடந்த மார்ச் மாதம் தான் கைப்பேசியில் அறிமுகமாகி இருக்கிறது. அதற்குள் அத்தனை பேர் பதிவிறக்கம் செய்துவிட்டார்கள்.

இந்த பப்ஜி விளையாட்டில் விமானத்திலிருந்து பாராசூட்டில் குதித்து ஒரு தீவில் இறங்க வேண்டும். அங்கு கவசத்தையும் வாங்கிக்கொண்டு துப்பாக்கியையும், எதிரிகளையும் எதிர்கொள்ள வேண்டும். பின்னர் பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு ஒரு கமாண்டோ வீரர்போல எதிரிகளைச் சுட்டுக்கொல்ல வேண்டும். அனைத்து எதிரிகளையும் ஒழித்த பின்னர் இறுதியில் நாம் மிஞ்சியிருந்தால் நாம்தான் வெற்றியாளர். நாம் சுடப்பட்டால் போர்க்களத்திலிருந்து வெளியேறிவிட வேண்டும்.



ஒரு ரவுண்டு விளையாட 30 நிமிடம் என்று பத்து ரவுண்டு விளையாடினால் என்னவாகும்? கிட்டத்தட்ட ஒரு 20 மதிப்பெண் பாடம் படித்து முடிக்கும் நேரம் வீணாகிவிடும். ஆனால் பாடம் படிக்கும் ஒரு அயற்ச்சியோ இதில் இல்லை. இங்கு உலக மக்களை எதிர்கொள்ளவும், ராணுவப் போர் புரியவும் வாய்ப்பு கிடைக்கிறது. வாய்மொழி உத்தரவு பிறப்பித்துக்கூட எதிரியை சாகடிக்கலாம். இதில் போட்டிகள் உண்டு. அதில் பதக்கங்கள் வேறு கிடைத்துவிடுகிறது. எனவே மாணவர்கள் இதனால் கவரப்பட்டும், கவ்வப்பட்டும், விளையாடியும், தோற்றும், ஜெயித்தும் அடிமையாகி விடுகின்றனர். தொடர்ந்து விளையாடுவது அவர்களின் உயிரியல் தேவையாக மாறிவிடுகிறது. அதாவது விளையாடவில்லை என்றால் குடிகாரர்களைப் போல கை உதறல் ஏற்படும்.

கைப்பேசி விளையாட்டு போதைக்கு அடிமையான மாணவர்களை எளிதில் கண்டுபிடிக்கலாம். இரவு முழுவதும் கம்ப்யூட்டர் அல்லது கைப்பேசியுடன் உறவாடிக்கொண்டிருப்பார்கள். பெற்றோர் பார்த்ததும் சுதாரித்துக்கொண்டு பள்ளி அசைன்மெண்ட் என்று சொல்லிவிடுகிறார்கள். காலையில் எழமாட்டார்கள், கல்லூரிக்கும் வழக்கமாக போகமாட்டார்கள். பகலிலும் தூங்கிவழிவார்கள்.

வீடியோ விளையாட்டிற்கு அடிமையானவர்கள் கம்ப்யூட்டர் விளையாட்டு உலகத்தில் மட்டும் இருந்து கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு தன்னை சுற்றி நடப்பது எதுவும் தெரியாது. அவர்கள் விளையாட தேவையான நபர்கள் வரும் நேரத்திற்காக காத்திருப்பார்கள். அந்த நேரம் வந்ததும் துரிதமாக ஓடிச்சென்று அவர்கள் விளையாட்டைத் தொடர்வார்கள்.

செய்ய வேண்டிய தினசரி கடமைகளையும் புறக்கணித்து இந்த கம்யூட்டர் விளையாட்டில் மூழ்கிக் கிடப்பதால் இந்த இளைஞன் பெரிய உடல்நலப்பாதிப்பிற்கும், மனநல பாதிப்பிலும், சமூக நல பாதிப்பிற்கும், அவமதிப்பிற்கும் உள்ளாகி விடுகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையை கண்டதும் உடனே மனநல மருத்துவரை அணுகுவது நல்லது. பெற்றோர், ஆசிரியர், உறவினர் என்று தனித்தனியாகவும் கூட்டாகவும் இவனது செயல்பாட்டில் தலையிட்டு இந்த விபரீத விளையாட்டை நிறுத்த முயற்சிக்கலாம். மாணவர்கள் மதிக்கும் ரோல்மாடல்கள் உண்டு. அவர்களிடம் அழைத்துச்சென்று ஆலோசனை பெறலாம். ஒரு சுற்றுலாவிற்கு அழைத்துச்சென்று இந்த விளையாட்டிற்கு இடைவெளி ஏற்படும் ஒரு சூழ்நிலையை உருவாக்கலாம். உடலால் விளையாடும் ஓடுதல், சைக்கிள், கைப்பந்து, கால்பந்து என்ற விளையாட்டுகளில் தினமும் 2 மணி நேரமாவது ஈடுபடுத்தலாம். பெற்றோர்களாகிய நீங்களே பிள்ளைகளுடன் நடைபயணம் செல்லலாம். விளையாட்டிற்காக ஒரு ஆண்டு பள்ளிப்படிப்பு வீணானாலும் பரவாயில்லை. இது ஒரு சிகிச்சை என்றே எடுத்துக்கொள்ளலாம்.

1996-ம் ஆண்டு முதல் போக்கிமேன் விளையாட்டை பல மாணவர்கள் விளையாடி நேரத்தை வீணடித்து பள்ளி கல்வியை தவறவிட்டார்கள். அதில் சிலர் சுதாரித்துக்கொண்டு பின்னர் தங்களை திருத்திக்கொண்டார்கள்.

உணவு போதை, சினிமா போதை, கிரிக்கெட் போதை, புகை போதை, மது போதை, பாலியல் போதை என்ற வரிசையில் இன்று இளைஞன் சீரழிவது இந்த கைப்பேசி போதையால்தான். மற்ற எல்லா போதைகளையும் விட கொடிய ஒரு நோய் இது என்று சந்தேகமின்றி கூறிவிடலாம்.

மாணவர்கள் கைப்பேசி விளையாட்டிற்கு அடிமையாயிருப்பதை அறிந்த தயாரிப்பு நிறுவனங்கள் 700 கோடி ரூபாய்க்கும் மேலாக முதலீடு செய்திருக்கிறார்கள். எனவே இன்னும் அதிகமாக போதை தரும் கவர்ச்சி விளையாட்டுகள் சந்தையில் விரைவில் வெளிவந்துவிடும். எனவே பெற்றோர்களே விழித்துக் கொள்ளுங்கள். கஜா புயல் எச்சரிக்கை, ஆசிய சுனாமி எச்சரிக்கை போன்று இந்த கைப்பேசி விளையாட்டு போதையின் தீவிர பாதுகாப்பு எச்சரிக்கையை சீரியசாக எடுத்து கொள்ளுங்கள்.

மாணவர்களே இது வேண்டாம் நீங்கள் விளையாட வேண்டியது கைப்பந்து, கூடைப்பந்து, ஓட்டம், நீச்சல் போன்ற நிஜமான விளையாட்டுகள். மொபைல் கேம் என்ற போலி விளையாட்டு விபரீதமானது. அது உங்கள் நிகழ்காலத்தை கொல்லும். எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும்.

முனைவர் செ.சைலேந்திரபாபு, ஐ.பி.எஸ்., காவல்துறை இயக்குனர்.
Tags:    

Similar News