பெண்கள் உலகம்

1 வயது வரை குழந்தைகளுக்கு தரக்கூடாத உணவுகள்

Published On 2018-09-20 10:32 IST   |   Update On 2018-09-20 10:32:00 IST
குழந்தைகளுக்கு 1 வயது ஆகும் வரை சில உணவுகள் தருவதை தவிர்த்து விடுவது நல்லது. ஏனெனில் அத்தகைய உணவுகள் குழந்தையின் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
குழந்தைகள் பிறந்து முதல் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் தருவதே நல்லது. தாய்ப்பால் அதிகம் சுரக்காத தாய்மார்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி ஃபார்முலா மில்க் தரலாம். தாய்ப்பால் சுரக்கும் உணவுகளை சாப்பிட்டால், தாய்ப்பால் சுரப்பு சீராக இருக்கும். 6 மாதத்துக்கு பிறகு திடஉணவுகளைக் கொடுக்கலாம். குழந்தைக்கு செரிக்காத, ஒவ்வாத உணவுகளைக் கொடுத்தால் குழந்தையின் ஆரோக்கியம் கெடலாம்.

குழந்தைகளுக்கு 1 வயது ஆகும் வரை சில உணவுகளை சில காலம் வரை தராமல் இருப்பது நல்லது. அவை என்னென்ன? பார்க்கலாம்.

1 வயது வரை குழந்தைகளுக்கு தரவே கூடாத உணவுகள்…

* குழந்தைக்கு ஒரு வயது தொடங்கிய பிறகுதான் பசும்பால் கொடுக்க வேண்டும். தாய்ப்பாலுக்கு பதிலாகவோ ஃபார்முலா மில்குக்கு பதிலாகவோ பசும்பாலை தரவே கூடாது. பசும்பாலில் உள்ள புரதங்களை குழந்தைகளால் செரிக்க முடியாது. இதனால் குழந்தைகளுக்கு செரிமான கோளாறு வரும். இரும்புச்சத்து குறைப்பாட்டை ஏற்படுத்தும். இதனால் குழந்தை பாதிப்புக்குள்ளாகும். குழந்தையின் உடலில் நீர் வறட்சி ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.



* குழந்தைகளுக்கு உப்பு கொடுப்பது தப்பு. குழந்தைகளுக்கு சுவை அரும்புகள் முழுமையாக வளர்ச்சி பெற்று இருக்காது. எனவே, உப்பு, இனிப்பு போன்ற சுவை குழந்தைகளுக்கு தெரியாது. பிளெயினான உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். உப்பு சேர்க்க தேவையில்லை. தாய்ப்பாலிலே சோடியம் கிடைத்துவிடும். மேலும், ஃபார்முலா பாலில் சோடியம் இருக்கும். நீங்கள் கூடுதலாக உப்பை திடஉணவில் சேர்த்து கொடுத்தால், குழந்தையின் உடலில் அதிக உப்பு சேரலாம். இதனால் சிறுநீரகங்கள் பாதிக்கும்.

* தீட்டப்பட்ட அதாவது ரீஃபைன்ட் சர்க்கரையை குழந்தைகளுக்கு தரவே கூடாது. பெரியவர்களும் சாப்பிட கூடாது. இதனால் பற்களில் சிதைவு ஏற்படலாம். மேலும் பல நோய்களுக்கு காரணமாகும். நோய் எதிர்ப்பு ஆற்றலை பலவீனப்படுத்தும். அதிக சர்க்கரை குழந்தைகளின் உடலில் சேர்ந்தால், உடல்பருமன், சர்க்கரை நோய், இதய நோய் போன்றவை வரலாம். பழச்சாறுகளிலிருந்து கிடைக்கும் இயற்கை சர்க்கரை குழந்தைகளுக்கு நல்லது. ஆனால், இந்த ரீஃபைன்ட் சர்க்கரை பாதிப்பை ஏற்படுத்தும்.

* இறால், நண்டு போன்ற உணவுகளை தாய்க்கோ குடும்பத்தில் யாருக்காவது அலர்ஜி இருந்தாலோ குழந்தைக்கு இந்த உணவுகளைத் தர கூடாது. அதுவும் ஒரு வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு தரவே கூடாது. ஏனெனில் அலர்ஜி அறிகுறிகள் தீவிரமாக இருக்கும். குழந்தைக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடலாம். எனவே இவ்வித உணவுகளை துளி அளவுக்கு கூட குழந்தைகள் தர வேண்டாம்.

* காபி, டீயில் கெஃபைன் அதிகமாக இருக்கும். இதை குழந்தைகளுக்கு ஒரு ஸ்பூன் அளவுக்கு காப்பி, டீ கொடுத்தாலும் மூச்சுத்திணறல், வாந்தி, வயிற்றுப்போக்கு, சோர்வு, தூக்கமின்மை ஆகியவற்றை ஏற்படுத்தும். பெரியவர்கள் சாப்பிடும்போது குழந்தைகள் பார்ப்பார்கள். எனினும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம். 
Tags:    

Similar News