வழிபாடு

தேர்பவனி நடந்த போது எடுத்த படம். ( உள்படம்: தேரில் எழுந்தருளிய ஆரோக்கியமாதா).

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதாவிற்கு முடி சூட்டும் நிகழ்ச்சி: திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

Published On 2023-06-01 05:53 GMT   |   Update On 2023-06-01 05:53 GMT
  • இந்த ஆலயமானது கீழை நாடுகளின் லூர்து நகர் என்றும் அழைக்கப்படுகிறது.
  • இந்த ஆலயம் வங்க கடற்கரையோரம் அமைந்திருப்பது சிறப்பு.

வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா அன்னை பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு வெளியூர், வெளிமாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இது சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. இந்த ஆலயமானது கீழை நாடுகளின் லூர்து நகர் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த ஆலயம் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஆலய கட்டிட அமைப்புகளில் பசிலிக்கா என்னும் சிறப்பு அந்தஸ்தையும் பெற்று விளங்குகிறது.

இந்த ஆலயம் வங்க கடற்கரையோரம் அமைந்திருப்பது சிறப்பு. இந்த பேராலயத்தில் மே மாதம் மாதாவிற்கு உகந்த மாதமாக கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மே மாதம் பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து கடந்த மாதம் 7-ந்தேதி முதல் சனிக்கிழமை தோறும் மாதா குளத்தில் திருப்பலி, தேர்பவனி மற்றும் திவ்ய நற்கருணை ஆசிர் நடைபெற்றது.

இதன் முக்கிய நிகழ்ச்சியான மாதாவிற்கு முடிசூட்டும் நிகழ்ச்சி மாதாகுளத்தில் நடைபெற்றது. இதில் தஞ்சை மறை மாவட்ட பரிபாலகர் சகாயராஜ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. பின்னர் பூஜை மேடையில் இருந்து கிரீடத்தை பவனியாக எடுத்துவரப்பட்டு அருகே உள்ள தேரில் உள்ள மாதாவின் சொரூபத்திற்கு தஞ்சை மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ் கிரீடத்தை வைத்து முடி சூட்டினார்.

பின்னர் தேரை புனிதம்செய்து பவனியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து திவ்ய நற்கருணை ஆசீர் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பேராலய அதிபர் இருதயராஜ், பங்குத்தந்தை அற்புதராஜ், பொருளாளர் உலகநாதன், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தனராஜ், ஆண்டோ ஜேசுராஜ் மற்றும் அருட் சகோதரர்கள், சகோதரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News