வழிபாடு

வைகாசி விசாகத்தின் சிறப்புகளும்... பலன்களும்...

Published On 2025-06-08 08:52 IST   |   Update On 2025-06-08 08:52:00 IST
  • மந்திரங்களும், பதிகங்களும் தெரியவில்லையே என்று மனம் வருந்த வேண்டாம்.
  • அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெறும் என்பது நம்பிக்கை.

இறை வழிபாடு என்பது நம் மனதை ஒருநிலைப்படுத்தும். நம் வாழ்வின் இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து நம்மை மீட்டெடுக்கும். இதை உணர்ந்தவர்கள் இறை வழிபாட்டையும் விரத நாட்களையும் எப்போதும் தவறவிடுவதில்லை. அதிலும் முருகனுக்கு உகந்த வைகாசி விசாகம் என்றால் சொல்லவா வேண்டும்.

இந்த ஆண்டு வைகாசி விசாகம் நாளை வருகிறது. அத்தகைய சிறப்புமிக்க வைகாசி விசாகம் நாளில் விரதம் இருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

முருகப்பெருமானுக்கு எத்தனை விழாக்கள் எடுத்தாலும், வைகாசி விசாக விழா தான் வளர்ச்சியைக் கொடுக்கும் விழாவாக அமைகின்றது. விசாக நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை தரிசித்தால் நிச்சயம் வெற்றி கிட்டும்! விரும்பியது நடக்கும்! அதனால் தான் திருசெந்தூர் முதல் தேசமெங்கும் உள்ள முருகனின் திருத்தலங்களில் வைகாசி விசாக விழாவை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கின்றார்கள்.



நினைத்தது நடக்க வேண்டும், நம்முடைய வேண்டுதல்களும், வழிபாடுகளும் இரு மடங்கு பலனை அள்ளி தர வேண்டும் என்றால் வைகாசி விசாக நாளில் விரதமிருந்து, முருகப் பெருமானை மனம் உருக வழிபட வேண்டும். அவருக்குரிய மந்திரங்கள், பதிகங்கள் முதலானவற்றை பாராயணம் செய்ய வேண்டும்.

மந்திரங்களும், பதிகங்களும் தெரியவில்லையே என்று மனம் வருந்த வேண்டாம். எளிமையாக 'ஓம்' என்ற பிரணவ மந்திரத்தையோ அல்லது முருகனுக்குரிய 'ஓம் சரவண பவ' என்ற ஆறெழுத்து மந்திரத்தையோ உச்சரித்தால் போதும். திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் படிக்கலாம். அனைத்து பலன்களும் உங்களை வந்து சேரும்.

விசாகத் திருநாளில் முருகனின் சன்னதிக்கு சென்று வழிபட்டால் வேண்டிய வரம் கிடைக்கும். திருத்தலத்திற்கு செல்ல முடியாதவர்கள் உங்கள் வீட்டு பூஜையறையில் முருகப்பெருமானின் படத்தை வைத்து அரளி, செம்பருத்தி முதலான மலர்களைக் கொண்டு அலங்கரிக்கலாம். சர்க்கரைப் பொங்கல் அல்லது எலுமிச்சை சாதம் நைவேத்தியமாக செய்து விளக்கேற்றி பிரார்த்தனை செய்யுங்கள். முடிந்தால், ஏழை, எளிய மக்களுக்கு எலுமிச்சை சாதம் வழங்குங்கள். குடை, செருப்பு, மோர், பானகம், தயிர் சாதம் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் திருமண பேறு கிட்டும். குழந்தைபேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும். இந்த விரதம் இருப்பவர்களுக்கு ஆபத்துக்கள் அகலும். அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெறும் என்பது நம்பிக்கை.

கடன் உள்ளிட்ட கவலைகளில் இருந்தும் வழக்கு உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்தும் நம்மை விடுவித்து அருளும் முருகனை

வைகாசி விசாக நட்சத்திர நாளில் வணங்கி வளம் பெறுவோம்.

Tags:    

Similar News