வழிபாடு

கிரிவலம் சென்ற பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியை படத்தில் காணலாம்.

திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

Published On 2022-10-10 07:41 IST   |   Update On 2022-10-10 07:41:00 IST
  • மலையையே சிவனாக பக்தர்கள் வழிபடுகின்றனர்.
  • நகரில் காணும் இடமெங்கும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது.

திருவண்ணாமலையில் நேற்று பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றதால் தரிசனத்துக்கு 4 மணி நேரம் வரை ஆனது.

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலின் பின்புறம் உள்ள மலை அண்ணாமலை என அழைக்கப்படுகிறது. மலையையே சிவனாக பக்தர்கள் வழிபடுகின்றனர்.

பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் மலையை சுற்றி 14 கி.மீ. தொலைவு கொண்ட கிரிவலம் செல்கின்றனர். இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று அதிகாலை 4.06 மணியளவில் தொடங்கியது. இதனால் நேற்று முன்தினம் இரவு முதலே பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

நகரில் காணும் இடமெங்கும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது. நள்ளிரவு முதலே அவர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர்.

அதுமட்டுமின்றி கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்க கோவில்கள் மற்றும் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தாிசனம் செய்தனர். பொது தரிசன வழியில் பக்தர்கள் சாமி செய்ய சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலானது.

தொடர்ந்து இரவு 7 மணிக்கு மேல் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றதால் கிரிவலப்பாதையில் ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். பவுர்ணமி கிரிவலத்தையொட்டி தற்காலிக பஸ் நிலையங்களில் பஸ்கள் நிறுத்தப்பட்டன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் மற்றும் 16 கால் மண்டபத்தின் முன்பு கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

பவுர்ணமி இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 3.09 மணி வரை இருந்ததை கருத்தில் கொண்டு பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.

Tags:    

Similar News