சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு ராஜகோபுர கலசங்கள் வந்தன
- சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ளது.
- ஏராளமான பக்தர்கள் கோபுர கலசங்களை தரிசனம் செய்தனர்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 107 அடி உயரம் கொண்ட கிழக்கு ராஜகோபுர கும்பாபிஷேக விழா வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவையொட்டி ராஜகோபுரத்துக்கு செப்பு உலோகத்தால் செய்யப்பட்ட சுமார் தலா 4¾ அடி உயரம் கொண்ட 7 கோபுர கும்ப கலசங்கள் பிரத்யேகமாக கும்பகோணத்தில் தயாரிக்கப்பட்டது.
இந்த கலசங்கள், ராஜகோபுரத்தை கட்டியுள்ள உபயதாரர்களான இரட்டை சகோதரர்கள் பொன்னர் சங்கர் ஆகியோருடைய சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாருக்கு கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து அங்குள்ள அழகு நாச்சியம்மன் கோவில் மற்றும் மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர் கலசங்களுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட லாரியில் கலசங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பரமத்தி வேலூர், போத்தனூர், பாண்டமங்கலம், கபிலர்மலை, பரமத்தி, நாமக்கல், மோகனூர், திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுப்புத்தூர், தொட்டியம், முசிறி, கொள்ளிடம் நம்பர் 1 டோல்கேட், சமயபுரம் நால்ரோடு, மாரியம்மன் கோவில் நுழைவு வாயில், கடைவீதி வழியாக ராஜகோபுரம் அருகே வந்தடைந்தது.
வழியில் ஏராளமான பக்தர்கள் கோபுர கலசங்களை தரிசனம் செய்தனர். மேலும் சமயபுரத்தில் கோபுர கலசங்களை சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் கல்யாணி, ராஜகோபுர உபயதாரர்கள் பொன்னர் சங்கர், கோவில் அர்ச்சகர்கள், மேலாளர், உள்துறை கண்காணிப்பாளர் மற்றும் கோவிலுக்கு அம்மனை தரிசிக்க வந்த ஏராளமான பக்தர்கள் பூக்களை தூவி வரவேற்றனர்.