வழிபாடு

சபரிமலையில் வனதேவதைகளுக்கு குருதி பூஜை நடத்தி இன்று கோவில் நடைஅடைப்பு

Published On 2023-01-20 10:20 IST   |   Update On 2023-01-20 10:20:00 IST
  • நேற்றிரவுடன் பக்தர்கள் தரிசனம் நிறைவு பெற்றது.
  • பிப்ரவரி 12-ந்தேதி மீண்டும் நடைதிறப்பு.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழாக்களில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருவார்கள்.

இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த மாதம் 27-ந் தேதி நடந்தது. இதுபோல மகர விளக்கு தரிசனம் கடந்த 14-ந் தேதி நடைபெற்றது. இந்த இரண்டு விழாக்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

இந்த விழாக்களுக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. அதன்பின்பு டிசம்பர் 27-ந் தேதி மண்டல பூஜை முடிந்த பின்னர் 2 நாட்கள் கோவில் நடை அடைக்கப்பட்டது. தொடர்ந்து மகர விளக்கு பூஜைகளுக்காக மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டது.

மகர விளக்கு பூஜை கடந்த 14-ந் தேதி நடந்தது. அதன்பின்பு 5 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நேற்றிரவுடன் பக்தர்கள் தரிசனம் நிறைவு பெற்றது.

அதன்பின்பு சபரிமலை காடுகளில் ஐயப்ப பக்தர்களை காத்த வன தேவதைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாளிகை புரத்து அம்மன் சன்னதியில் குருதி பூஜைகள் நடந்தது.

தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. காலையில் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், அபிஷேகம் ஆகியவை நடைபெற்றது. அதன்பின்பு காலை 7 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது.

தொடர்ந்து கோவில் சாவியும் ஒப்படைக்கப்பட்டது. இனி பிப்ரவரி மாதம் 12-ந் தேதி மாசி மாத பூஜைகளுக்காக கோவில் நடை திறக்கப்படும்.

இந்த ஆண்டு மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு காலத்தில் கோவிலுக்கு கூடுதல் வருவாய் கிடைத்தது. இதில் பக்தர்கள் வெற்றிலையுடன் கட்டி போட்ட உண்டியல் காணிக்கை பணம் உடனடியாக எண்ணப்படவில்லை. இதனால் அந்த பணம் நாசமாகிவிட்டதாக கூறப்பட்டது. இது தொடர்பாக கேரள ஐகோர்ட்டு தேவசம்போர்டு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு உள்ளது.

Tags:    

Similar News