வழிபாடு

ஐயப்பன் பற்றி 5 தகவல்கள்

Published On 2022-12-02 08:31 GMT   |   Update On 2022-12-02 08:31 GMT
  • மணிகண்டனுக்கு ஐயப்பன் என்ற பெயர் வந்ததன் காரணமாக ஒரு வரலாறு கூறப்படுகிறது.
  • சபரிமலையில் மகர சங்கராந்தி தரிசனம் சிறப்பாகச் சொல்லப்படுகிறது.

1. சபரிமலையில் முதன் முதலில் பரசுராமரே சாஸ்தா கோவிலை எழுப்பினார். அப்போது தர்மசாஸ்தாவின் விக்ரகத்தை அவர் அங்கே பிரதிஷ்டை செய்தார்.

2. அவதார நோக்கமான மகிஷி சம்ஹாரம் முடிந்ததும், சின் முத்திரைக்காட்டி யோக பட்டம் தரித்து தவக்கோலத்தில் அமர்ந்த ஐயப்பன், தவத்தின் நிறைவாக, பரசுராமர் அமைத்த தர்மசாஸ்தா விக்ரகத்தில் ஐக்கியமானார். அதன் பிறகே சின்முத்திரை காட்டி யோக பட்டம் தரித்து, அமர்ந்த நிலையில் உள்ள ஐயப்பனின் வடிவம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

3. ஆதிகாலத்தில் பரசுராமர் பிரதிஷ்டை செய்த சாஸ்தாவின் வடிவிற்கு ஆண்டுக்கு ஒரு முறை மகர சங்கராந்தி, அன்று மட்டுமே வழிபாடுகள் நடத்தப்பட்டன. ஐயப்பன் வடிவம் அமைந்த பிறகே மாத பூஜைகள், மண்டல பூஜைகள் மகரவிளக்கு பூஜைகள் தொடங்கப்பட்டன. அதனால்தான் இன்று சபரிமலையில் மகர சங்கராந்தி தரிசனம் சிறப்பாகச் சொல்லப்படுகிறது.

4. ஐயப்பன் என்றதும் சின்முத்திரை காட்டி, யோகபட்டம் தரித்து அமர்ந்திருக்கும் வடிவமே பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால் அவர் நான்கு விதமான ஆசனங்களில் அமர்ந்து, நான்கு வகையான முத்திரைகளைக் காட்டுபவர் என்கிறது பூதநாததோ பாக்யானம், தியானபிந்து ஆசனத்தில் அபய சின்முத்திரை தரித்தும், கிருக நாரீயபீட ஆசனத்தில் யோகப் பிராண முத்திரையுடனும், குதபாத சிரேஷ்டாசனத்தில் அபான பந்த முத்திரையோடும் அஷ்டகோண சாஸ்தா பீடத்தில் யோக பத்ராசனத்திலும் வீற்றிருந்து அருள்கிறார் ஐயப்பன்.

5. ஹரிஹர புத்ரனாகிய மணிகண்டனுக்கு ஐயப்பன் என்ற பெயர் வந்ததன் காரணமாக ஒரு வரலாறு கூறப்படுகிறது. பந்தளராஜன் மகனாக வளர்ந்த மணிகண்டன், அவதார நோக்கம் முடித்து, பந்தளராஜனை விட்டுப் பிரிய வேண்டிய நேரம் வந்தது. அந்த சமயத்தில் கலங்கி நின்ற தனது வளர்ப்புத் தந்தையிடம் நான் இனி வனத்தில் வாசம் செய்வேன். என்னை காண வேண்டும் என நீங்கள் நினைத்தால், கல்லும் முள்ளும் நிறைந்த காட்டு வழியே வர வேண்டும். வழி தெரியாமல் நீங்கள் திணறாமல் இருக்க கருடன் உங்களுக்கு வழிகாட்டுவான் என்று சொல்லி விடை பெற்றுச் சென்றார். தன் மைந்தன் மணிகண்டனைப் பார்க்க சென்ற போதெல்லாம் பந்தளராஜன் காடு, மலைக்களைக் கடக்க மிகவும் சிரமப்பட்டார். அப்போது ஐயனே, அப்பனே என்றெல்லாம் அவர் சொன்ன வார்த்தைகளே இணைந்து ஐயன், அப்பன் ஐயப்பன் என்றாகி விட்டதாகச் சொல்லப்படுகிறது.

Tags:    

Similar News