வழிபாடு
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் இன்று தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
- திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோவில் மிகவும் பழமையானதாகும்.
- தினமும் உற்சவர் வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்று வருகின்றது.
சிவபெருமான் நடன மாடிய ஐந்து சபைகளில் முதல் சபையான ரத்தினசபையும், காரைக்கால் அம்மையார் தலைகீழாக கைகளால் நடந்து வந்து ஈசனை வழிபட்ட சிறப்பு பெற்ற திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோவில் மிகவும் பழமையானதாகும்.
திருத்தணி முருகன் கோவிலின் இணை கோவிலான இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர விழா 7 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர விழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினமும் உற்சவர் வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்று வருகின்றது. உற்சவத்தில் முக்கிய நிகழ்ச்சியான கமல தேரோட்டம் இன்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட கமலா தேரில் உற்சவர் வடாரண்யேஸ்வரர் எழுந்தருளினார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர். கோவில் மாட வீதிகளில் தேர்வலம் வந்தது.