வழிபாடு

சாமி சிலைகள் புறப்பட்டபோது பக்தர்கள் வரவேற்பு அளித்ததை படத்தில் காணலாம்.

நவராத்திரி விழாவில் பங்கேற்க திருவனந்தபுரம் சென்ற சாமி சிலைகள் குமரிக்கு புறப்பட்டன

Published On 2022-10-08 11:30 IST   |   Update On 2022-10-08 11:30:00 IST
  • நவராத்திரி விழா கடந்த 26-ந்தேதி தொடங்கியது.
  • ஞாயிற்றுக்கிழமை மாலையில் சாமி சிலைகள் குமரி மாவட்டம் வந்தடைகிறது.

திருவனந்தபுரத்தில் நடந்த நவராத்திரி விழாவில் பங்கேற்க கடந்த மாதம் 22-ந்தேதி சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் புறப்பட்டு பத்மநாபபுரம் அரண்மனையை அடைந்தது. அங்கிருந்து 23-ந்தேதி முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோவில் வேளிமலை முருகன், பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி சிலைகள் ஊர்வலமாக திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டு சென்றன.

திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா கடந்த 26-ந்தேதி தொடங்கியது. சாமி சிலைகள் திருவனந்தபுரத்தில் உள்ள கோவில்களில் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தன.

நவராத்திரி விழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று முன்தினம் காலையில் ஆரியசாலை கோவிலில் இருந்து வேளிமலை முருகன், வெள்ளிகுதிரை மீது அமர்ந்து ஊர்வலமாக புறப்பட்டு பூஜைப்புரை மண்டபம் வந்து சேர்ந்தது.

மாலை 4.30 மணிக்கு பள்ளி வேட்டைக்கு குமாரகோவில் வேளிமலை முருகன் மண்டபத்தில் எழுந்தருளினார்.

பள்ளி வேட்டையை தரிசிக்க பூஜைபுரை மண்டபத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். பள்ளிவேட்டை முடிந்த பின்னர், ஆரியசாலை கோவிலுக்கு எடுத்துச் சென்றனர்.

நவராத்திரி சாமி சிலைகளுக்கு நேற்று முன்தினம் நல்லிருப்பு எனப்படும் ஓய்வு அளிக்கப்பட்டது. தொடர்ந்து வேளிமலை முருகன், முன்னுதித்த நங்கை அம்மன், சரஸ்வதி தேவி சாமி சிலைகள் நேற்று கிள்ளிப்பாலம் சந்திப்புக்கு எடுத்து வரப்பட்டது. பின்னர், அங்கிருந்து குமரி மாவட்டம் பத்மநாபபுரத்துக்கு புறப்பட்டன. வழிநெடுக சாமி சிலைகளுக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலையில் சாமி சிலைகள் குமரி மாவட்டம் வந்தடைகிறது.

Tags:    

Similar News