வழிபாடு

நவலூர் குட்டப்பட்டு அடைக்கல அன்னை ஆலய தேர்பவனி

Published On 2024-04-22 05:30 GMT   |   Update On 2024-04-22 05:30 GMT
  • தினமும் இரவில் நவநாள் திருப்பலி நடைபெற்றது.
  • திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

மணிகண்டம்:

மணிகண்டம் ஒன்றியம், நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் உள்ள அருள்நிறை அடைக்கல அன்னை ஆலய திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் இரவில் நவநாள் திருப்பலி நடைபெற்றது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு நற்கருணை பவனியும், இயேசுவின் திருப்பாடுகள் காட்சி எனப்படும் பாஸ்கா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நேற்று முன்தினம் இரவு தேர்பவனி நடைபெற்றது. இதையொட்டி மாலையில் திருவிழா சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது.

நள்ளிரவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 4 சப்பரங்களில் அருள்நிறை அடைக்கல அன்னை, செபஸ்தியார், அந்தோணியார் மற்றும் ஆவூர் தேர் என்று அழைக்கப்படும் சப்பரத்தில் உயிர் நீத்த ஆண்டவர் ஆகிய சொரூபங்கள் வைக்கப்பட்டு முக்கிய வீதிகளில் தேர்பவனி நடைபெற்றது.

முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர் நேற்று அதிகாலை நிலையை அடைந்தது. விழாவில் நவலூர் குட்டப்பட்டு, ராம்ஜிநகர், சோமரசம்பேட்டை, புங்கனூர், மணிகண்டம், திருச்சி, அம்மாபேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

நேற்று காலை தேரடி திருப்பலி, புது நன்மை ஆடம்பர கூட்டு திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இரவில் உபய தேர்பவனியும், கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதையடுத்து பட்டிமன்றம் நடைபெற்றது.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாக மணியக்காரர்கள் சேவியர், ஜெரின் ராஜதுரை, கொத்து மணியக்காரர்கள், கத்தோலிக்க இளைஞர் மன்றத்தினர் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News