- துளசி, வடை, லட்டு மாலைகள் சாற்றி பக்தர்கள் வழிபட்டனர்.
- ஆஞ்சநேயருக்கு தீபாராதனை காட்டப்பட்டது.
சென்னை:
ராமாயணத்தின் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் ஒருவர் அனுமன். ராம பக்தன், வாயு புத்திரன், சிரஞ்ஜீவி, மாருதி, ஆஞ்சநேயர் என பலவிதமான பெயர்களால் அழைக்கப்படும் அனுமன் வானர குலத்தை சேர்ந்த அஞ்சனைக்கும், கேசரிக்கும் மகனாக அவதரித்தவர்.
இவர் மார்கழி மாதம் அமாவாசை திதியில், மூல நட்சத்திரத்தில் அவதரித்ததாக புராணங்கள் சொல்கின்றன. இதனால் தமிழகத்தில் அனுமன் ஜெயந்தி விழா ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.
அதன்படி சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டை, நங்கநல்லூர் அனுமன் கோவில், இதுதவிர பெருமாள் கோவில்களில் உள்ள அனுமன் சன்னிதிகளிலும் சிறப்பு திருமஞ்சனம், துளசி, வடை, லட்டு மாலைகள் சாற்றி பக்தர்கள் வழிபட்டனர்.
அசோக்நகர் சாமியார் தோட்டத்தில் உள்ள கருமாரி திரிபுர சுந்தரி கோவிலில் உள்ள அனுமன் சன்னதியில் ஒரு லட்சத்து எட்டு வடை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அனுமன் அருள்பாலித்தார். தியாகராய நகரில் உள்ள சிவவிஷ்ணு கோவிலில் உள்ள அனுமன் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடந்தது.
அதேபோல் நங்கநல்லூர் மற்றும் ஆழ்வார்பேட்டையில் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் ஆஞ்சநேயருக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பன்னீர், தயிர், பால், அரிசி மாவு, தேன், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடந்தது. அபிஷேகங்களின் நிறைவாக ஆஞ்சநேயருக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.