கபிலேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா: வியாக்ர, யானை வாகனங்களில் சோமஸ்கந்தர், காமாட்சி வீதிஉலா
- இன்று கல்ப, குதிரை வாகன வீதிஉலா நடக்கிறது.
- திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 9 மணிவரை உக்கிரமான வியாக்ர வாகனத்தில் உற்சவர் சோமஸ்கந்தமூர்த்தி, காமாட்சி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். வாகனத்துக்கு முன்னால் வீதிகளில் கோலாட்டங்கள், பஜனைகள் நடந்தது. மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டது.
அதன்பிறகு அர்ச்சகர்கள் உற்சவர்களுக்கு காலை 10.30 மணியில் இருந்து 11.30 மணி வரை மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், பழச்சாறுகள் மற்றும் நறுமண திரவியங்களால் ஸ்நாபன திருமஞ்சனம் செய்வித்தனர்.
அதைத்தொடர்ந்து இரவு 8 மணியில் இருந்து காலை 9 மணிவரை யானை வாகன வீதிஉலா நடந்தது. வீதிஉலாவில் கோவில் துணை அதிகாரி தேவேந்திரபாபு, உதவி அதிகாரி பார்த்தசாரதி மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு குதிரை வாகன வீதிஉலா நடக்கிறது.