கும்பாபிஷேகம் நடத்துவதற்காக பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவிலில் தேவபிரசன்னம் பார்க்கப்பட்டது...
- பூதப்பாண்டியில் பூதலிங்கசாமி-சிவகாமி அம்பாள் கோவில் உள்ளது.
- பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி கோவிலில் தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது.
பூதப்பாண்டியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான பூதலிங்கசாமி-சிவகாமி அம்பாள் கோவில் உள்ளது. கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக இந்து சமய அறநிலையத்துறை மற்றும் புத்தக சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதற்கு முன்னதாக பாலாலயம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டது. இதற்காக தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் காலையில் கோவிலில் நடந்தது.
பிரசன்னத்தில், இந்த பகுதியில் இறப்புகள் அதிக அளவில் நடந்து வருகிறது. நோய்கள் பாதிப்பும் இருப்பது தெரிகிறது. எனவே கோவிலில் மிருத் யுஞ்சய ஹோமம் ஒரு வாரத்தில் செய்ய வேண்டும். கோவிலில் உள்ள ராகு, கேதுக்கு சரியான முறையில் பூஜைகள் செய்யப்பட வேண்டும். கோவிலில் நிர்வாகம் அதனை சரியாக செய்யவில்லை.
ஆடம்பரம் இல்லாத காலத்தில் பூஜைகள் முறையாக நடந்தன. தற்போது ஆடம்பரமாகி விட்ட நிலையில் பூஜைகள் முறையாக நடத்தவில்லை. மேலும், இங்கு உள்ள ராமர் பாதம் மற்றும் சாஸ்தாவுக்கு தினசரி பூஜைகள் செய்ய வேண்டும்.
தினசரி பூஜை செய்யும்போது சங்கு ஊதி, பாணி அடித்து, நெய்வேத்தியம் படைத்து பூஜைகள் நடத்த வேண்டும். தெப்பக்குளம் பாழடைந்து துர்நாற்றம் வீசுகிறது. அதற்கு ஜலபிரிதி பூஜை நடத்த வேண்டும் என கூறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.