வழிபாடு
சாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்ததையும், பக்தர் ஒருவர் பூசணியில் விளக்கேற்றி வழிபட்டதையும் காணலாம்.

தேய்பிறை அஷ்டமி: காலபைரவர் கோவில்களில் பக்தர்கள் பூசணியில் விளக்கேற்றி வழிபாடு

Published On 2022-03-26 08:41 IST   |   Update On 2022-03-26 08:41:00 IST
தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபரைவர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பூசணியில் விளக்கேற்றி வழிபட்டனர்.
கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியில் உள்ள காலபைரவர் கோவிலில், நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், காலபைரவ மஹா ஹோமம், காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, தீர்த்த பிரசாதம் வழங்கல் ஆகியவை நடந்தது.

தொடர்ந்து காலபைரவர் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூசணி மற்றும் தேங்காயில் விளக்கேற்றி வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பக்தா்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டன.

இதேபோல், கிருஷ்ணகிரி அடுத்த சூரன் குட்டையில் உள்ள தட்சிண காலபைரவர் கோவில், கந்திகுப்பம் காலபைரவர் கோவில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து காலபைரவர் ேகாவில்களிலும் தேய்பிறை அஷ்டமியையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News