ஆன்மிகம்
முத்தாரம்மன் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்த பக்தர்களை படத்தில் காணலாம்.

முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்

Published On 2021-10-12 10:28 IST   |   Update On 2021-10-12 10:28:00 IST
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில், 3 நாட்களுக்கு பிறகு சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் கோவிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முக்கிய விழா நாட்களிலும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இதனால் கொடியேற்றம் நடந்த முதலாவது திருநாளிலும், 3 முதல் 5-ம் திருநாள் வரையிலும் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. 2-ம் திருநாளில் கோவிலில் சாமி தரிசனத்துக்கு அனுமதித்தபோது, விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் காப்பு வாங்கி கைகளில் அணிந்தனர்.

தொடர்ந்து நேர்த்திக்கடனாக காளி, சிவன், பார்வதி, ராமர், லட்சுமணர், அனுமர், நாராயணர், பிரம்மன், விஷ்ணு போன்ற பல்வேறு வேடங்களை அணிந்து அந்தந்த ஊர்களிலேயே காணிக்கை வசூலித்து வருகின்றனர்.

தசரா திருவிழாவின் 6-ம் திருநாளான நேற்று முதல் 9-ம் திருநாளான வருகிற 14-ந்தேதி (வியாழக்கிழமை) வரையிலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் கோவிலில் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் சாமி தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

3 நாட்களுக்கு பிறகு சாமி தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதித்ததால், நேற்று அதிகாலை முதலே கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

காலை முதல் இரவு வரையிலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றது. இரவில் அம்மன் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் எழுந்தருளி, கோவில் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவின் நிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 10-ம் திருநாளான வருகிற 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நள்ளிரவில் கோவில் முன்பாக பக்தர்களின்றி எளிமையாக நடைபெறுகிறது.

Similar News