ஆன்மிகம்
திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 11-ந்தேதி கருடசேவை

Published On 2021-09-23 07:32 GMT   |   Update On 2021-09-23 08:44 GMT
திருப்பதி கோவிலில் இந்த ஆண்டு பக்தர்கள் இல்லாமல் பிரம்மோற்சவ விழா நடைபெறும். சாமி வீதிஉலா ரத்து செய்யப்பட்டு கோவிலுக்குள் வாகன உற்சவங்கள் நடைபெற உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் 7-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் ஜவகர் ரெட்டி நேற்று அன்னமய்யா பவனில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆண்டு கொரோனா 3-வது அலை பரவும் என்ற அச்சம் உள்ளதால் பிரம்மோற்சவ விழா பக்தர்கள் இன்றி நடைபெற உள்ளது.

மாடவீதிகளில் சாமி ஊர்வலம் கிடையாது. கோவில் ரங்கநாயகர் மண்டபத்தில் வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருள்வார்.

பிரம்மோற்சவ விழாவையொட்டி 5-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. 6-ந்தேதி அங்குரார்ப்பணம், 7-ந்தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக தொடங்குகிறது.

11-ந்தேதி தங்க கருட வாகனத்தில் ஏழுமலையான் அருள்பாலிக்கிறார். 12-ந்தேதி தங்க ரதத்திற்கு பதிலாக சர்வ பூபால வாகனமும், 14-ந்தேதி ரத உற்சவத்திற்கு பதிலாக சர்வ பூபால வாகனமும் 15-ந்தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறுகிறது. அன்று மாலை கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.

பிரம்மோற்சவ விழாவின்போது தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், தங்குமிடம் மருத்துவ வசதிகள் கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளை பக்தர்களுக்கு ஏற்படுத்தி தரவேண்டும்.

மேலும் பக்தர்கள் திருமலைக்கு வந்து செல்ல ஏதுவாக போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். பிரமோற்சவ விழாவிற்கு முன்னதாக அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி முடித்திருக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Tags:    

Similar News