ஆன்மிகம்

தஞ்சையில் முத்துப்பல்லக்கு வீதி உலா

Published On 2019-05-22 07:58 GMT   |   Update On 2019-05-22 07:58 GMT
தஞ்சையில் உள்ள கோவில்களில் இருந்து விநாயகர், முருகன் ஆகியோர் முத்துப்பல்லக்கில் எழுந்தருளி 4 வீதிகளிலும் உலா வருவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு முத்துப்பல்லக்கில் சாமி வீதி உலா நடைபெற்றது.
தஞ்சையில் ஆண்டு தோறும் முத்துப்பல்லக்கு வீதி உலா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு நடைபெற்றது.

இந்த விழாவையொட்டி தஞ்சையில் உள்ள கோவில்களில் இருந்து விநாயகர், முருகன் ஆகியோர் முத்துப்பல்லக்கில் எழுந்தருளி 4 வீதிகளிலும் உலா வருவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு முத்துப்பல்லக்கில் சாமி வீதி உலா நடைபெற்றது. தஞ்சை சின்ன அரிசிக்காரத்தெருவில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் இருந்து விநாயகர், முருகன், தஞ்சை மானம்புச்சாவடி விஜயமண்டப தெருவில் உள்ள ஜோதி விநாயகர் கோவிலில் இருந்து விநாயகர், முருகப்பெருமான், கீழவாசல் உஜ்ஜையினி மகாகாளியம்மன் கோவில் விநாயகர்,

தெற்கு வீதியில் உள்ள கமலரத்ன விநாயகர் கோவிலில் இருந்து விநாயகரும் முத்துப்பல்லக்கில் எழுந்தருளினர். இதே போல் தஞ்சை கீழவாசல் வெள்ளைப்பிள்ளையார் விநாயகர் கோவில், மாமாசாகிப்மூலையில் உள்ள சித்தி விநாயகர் கோவில், கீழவாசல் குறிச்சி தெருவில் உள்ள சுப்பிரமணியசாமி கோவில், காமராஜர் மார்க்கெட்டில் உள்ள செல்வவிநாயகர் உள்பட பல்வேறு கோவில்களில் இருந்து முத்துப்பல்லக்கில் விநாயகரும், முருகப்பெருமானும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இந்த பல்லக்குகள் எல்லாம் அந்தந்த கோவில்களில் இருந்து புறப்பட்டு நேற்று இரவு மாமாசாகிப்மூலையை வந்தடைந்தது. அங்கிருந்து தஞ்சை தெற்கு வீதி, கீழவீதி, மேலவீதி, வடக்கு வீதி ஆகிய வீதிகளில் வலம் வந்து மீண்டும் மாமாசாகிப்மூலையை அடைந்தது. பின்னர் அங்கிருந்து தங்களது கோவில்களுக்கு சென்றடைந்தது. முத்துப்பல்லக்கு வீதி உலா நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News