ஆன்மிகம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் 10-ந்தேதி தொடங்குகிறது

Published On 2019-04-08 06:38 GMT   |   Update On 2019-04-08 06:38 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் 10-ந் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி நாளை பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி நடக்கிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். கோவிலில் தீபத் திருவிழா, மகா சிவராத்திரி விழா போன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

சித்திரை மாதத்தில் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் நடைபெறும். இந்த உற்சவ விழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டிற்கான சித்திரை வசந்த உற்சவம் 10-ந் தேதி (புதன்கிழமை) தொடங்கி வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4.30 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதி எதிரில் நடைபெற உள்ளது.

இதையடுத்து 10-ந் தேதி இரவு உச்சக்கால அபிஷேகம் மற்றும் இரவில் மண்டகப்படி நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து வருகிற 18-ந் தேதி வரை இரவில் மண்டகப்படி நிகழ்ச்சி நடக்கிறது. 19-ந் தேதி காலையில் அய்யங்குளத்தில் தீர்த்தவாரியும், இரவில் கோபால விநாயகர் கோவிலில் மண்டகப்படி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

பின்னர் அன்று இரவு 10 மணி அளவில் கோவில் கொடிமரம் அருகில் மன்மத தகனம் நிகழ்ச்சி நடக்கிறது.

ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ர.ஞானசேகர், கோவில் அலுவலர்கள் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News