ஆன்மிகம்
திருக்கல்யாண உற்சவத்தில் தேவநாதசாமி, ஆண்டாளுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த போது எடுத்த படம்.

திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்

Published On 2019-01-16 03:02 GMT   |   Update On 2019-01-16 03:02 GMT
திருவந்திபுரம் தேவநாதசாமிகோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாதசாமிகோவில் 108 வைணவ தலங்களில் சிறப்பு வாய்ந்தது. இக்கோவிலில் ஆண்டாள் உற்சவம் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. நேற்று ஆண்டாளுக்கும், தேவநாதசாமிக்கும் திருக்கல்யாண உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. முன்னதாக காலையில் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து ஆண்டாளுக்கும், தேவநாதசாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையடுத்து சாமிக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி மங்கள வாத்தியத்துடன் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் தேவநாதசாமியும், ஆண்டாளும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். அதன்பிறகு சாமி வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இன்று (செவ்வாய்க் கிழமை) பொங்கல் பண்டிகையையொட்டி தேவநாதசாமிக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. நாளை(புதன்கிழமை) கோவிலில் மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி தேவநாதசாமிக்கு காலையில் சிறப்பு பூஜை நடைபெறும். மாலையில் வெள்ளி குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பரிவேட்டை செல்வார்.

அப்போது கெடிலம் ஆற்றில் இறங்கி அலங்காரம் செய்யப்பட்டு உள்ள மாடுகளை சுற்றி வந்து பரிவேட்டை ஆடுவார். இதையடுத்து சாமி வீதி உலா நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News