ஆன்மிகம்

மரத்தடி விநாயகரும் பலன்களும்

Published On 2018-09-25 06:23 GMT   |   Update On 2018-09-25 06:23 GMT
பிள்ளையார் பல்வேறு மரத்தின் அடியில் இருந்து பலவிதமாக பக்தர்களுக்கு அருள்புரிகிறார். எந்தெந்த மரத்தடியில் வீற்றிருக்கும் பிள்ளையாரை வழிபட்டால் என்னென்ன சிறப்பு உண்டாகும் என்று பார்க்கலாம்.
பிள்ளையார் பல்வேறு மரத்தின் அடியில் இருந்து பலவிதமாக பக்தர்களுக்கு அருள் புரிகிறார். எந்தெந்த மரத்தடியில் வீற்றிருக்கும் பிள்ளையாரை வழிபட்டால் என்னென்ன சிறப்பு உண்டாகும் என்பது இங்கே:-

வில்வமர விநாயகர்:
தெற்கு நோக்கியவாறு இருந்தால் சிறப்புடையது. சித்திரை நட்சத்திரத்தன்று குடும்பத் தேவைக்கேற்ப மளிகைப் பொருட்களை, ஏழைக்குடும்பங்களுக்கு தானமாக அளித்து வில்வமர விநாயகரைச் சுற்றி வந்து வணங்கினால் பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வர்.

அரசமர விநாயகர்: மேற்கு நோக்கி இருப்பது சக்தி வாய்ந்ததாகும். பூச நட்சத்திரத்தன்று அன்னாபிஷேகம் செய்தால் நிலம் மற்றும் தோட்டத்தில் விளைச்சல் பெருகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிட்டும். பணக்கஷ்டம் நிவர்த்தியாகும்.

ஆலமர விநாயகர்: வடக்கு நோக்கி இருந்தால் சிறப்புடையது. நோயாளிகள் மகம் நட்சத்திரத்தன்று ஐந்து வகை சித்திரான்னங்களை (எலுமிச்சை, தயிர், பால், புளி, தேங்காய்) படைத்து தானமளித்தால் கடுமையான நோய்கள் விலகிவிடும்.

வேப்பமரத்து விநாயகர்: கிழக்கு முகப்பிள்ளையார் விசேஷம் நிறைந்தவர். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் ஐந்து வித எண்ணெய்த் தீபமான பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் மனதுக்கேற்ற வரன் அமையும்.

மாமர விநாயகர்: கேட்டை நட்சத்திரத்தன்று விபூதிக் காப்பிட்டு மூன்று சுமங்கலிப் பெண்களுக்கு உடை, உணவு, அளித்து வந்தால் பகைமை, கோபம், பொறாமையால் பாதிக்கப்பட்ட வியாபாரம் சீர்பெறும்.

புன்னைமர விநாயகர்: ஆயில்ய நட்சத்திரத்தில் இளநீர் அபிஷேகமும் செய்து நெசவுத்துணிகளை பிள்ளையாருக்கு அணிவித்து அதனை ஏழை நோயாளிகளுக்கு அளித்து வந்தால் கணவன்-மனைவியிடையே உள்ள மனக்கசப்பு நீங்கி தாம்பத்திய உறவு சீர்பெறும்.

மகிழமர விநாயகர்: அனுஷ நட்சத்தித்தில் இந்த மகாகணபதிக்கு மாதுளம் பழ முத்துக்களால் அபிஷேகம் செய்து வந்தால் ராணுவம், வெளிநாடுகளில் உள்ளோர் நலம் பெறுவர். மகிழ மரப்பிள்ளையாரை முறைப்படி தொழில் செய்வினைகள் மற்றும் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் பொறாமை, கண்திருஷ்டி நீங்கி, கவுரவமான வாழ்வு மலரும்.

வன்னிமர விநாயகர்:
அவிட்டம் நட்சத்திரந்தோறும் வன்னி விநாயகரை நெல்பொரியினால் அர்ச்சித்து அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமண காரியத்தில் வரும் தடை நீங்கி, மகிழ்ச்சியான குடும்பம் அமையும். ஜாதகப் பொருத்தம் சரியாக இருந்தும், மணவாழ்க்கையில் தம்பதிகள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, மனக்கசப்போடு பிரிந்து வாழ்பவர்கள் சஞ்சலம் அகன்று சுகவாழ்வு காண்பார்கள். வன்னிமரப் பிள்ளையாரைக் காண்பதே அரிது. வன்னிமரத்திற்கு விசேஷ அம்சங்கள் உண்டு. வன்னி மரத்தடிப் பிள்ளையாரை வணங்கி நள தமயந்தி முன் வினை நீங்கி நலன்பெற்றதாக வரலாறு இருக்கிறது.
Tags:    

Similar News