ஆன்மிகம்

சுந்தரேஸ்வரர்-மீனாட்சி அம்மன் திருக்கல்யாண உற்சவம்

Published On 2018-08-02 03:03 GMT   |   Update On 2018-08-02 03:03 GMT
சேலம் சீலநாயக்கன்பட்டி சுந்தரேஸ்வரர்-மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
சேலம் சீலநாயக்கன்பட்டி பெருமாள் கோவில் மேடு சக்தி காளியம்மன், மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி கோவில் மகளிர் மன்றம் சார்பில் நேற்று மாலை கோவில் அருகில் அலங்கார மேடையில் சுந்தரேஸ்வரர்-மீனாட்சி அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

மதியம் 2 மணிக்கு மீனாட்சி அம்மன் தாய்வீட்டு சீதனமாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத லட்சுமி பெருமாளிடம் சீர் பெற்று சீர் வரிசை, முளைப்பாரிகையுடன் கோவிலில் இருந்து ஊர்வலமாக மணப்பந்தலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து விக்னேஷ்வர பூஜையுடன் சுந்தரேஸ்வரர் மணப்பந்தலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடந்தது.

இதையடுத்து பஞ்ச வாத்தியங்கள் முழங்க மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவமும், சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. திருமண கோலத்தில் அருள்பாலித்த சாமிகளை பொதுமக்கள் பலர் தரிசனம் செய்து வழிபட்டனர். மேலும், பெருமாள் கோவில் மேடு உள்ளிட்ட அப்பகுதியில் உள்ள முக்கிய வீதிகளில் சாமி திருவீதி உலா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர். 
Tags:    

Similar News