கோவில்கள்

தாமிரசபை கொண்ட நெல்லையப்பர் திருக்கோவில்

Published On 2023-07-02 06:13 GMT   |   Update On 2023-07-02 06:13 GMT
  • நெல்லையப்பர் கோவில் பல கட்டங்களில் பல மன்னர்களால் கட்டப்பட்டது.
  • நெல்லையப்பர் கோவில் தூண்கள் அனைத்தும் சிற்ப வேலைபாடுகள் நிறைந்துள்ளன.

நெல்லையில் உள்ள டவுனில் பிரசித்திபெற்ற நெல்லையப்பர் கோவில் அமைந்துள்ளது. கலைநயத்துடன் கட்டப்பட்டு உள்ள இந்த கோவிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்துக்கு மேலாக ஒரு வெள்ளைநிற நந்தி படுத்திருக்கிறது. அடுத்து உள்ளே சென்றால் சுமார் 9 அடியில் விநாயகர் வீற்றிருக்கிறார்.

மூலவரை சுற்றி 3 பிரகாரங்கள் இருக்கின்றன. முதல் பிரகாரத்தில் எல்லா கோவில்களை போல தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் சன்னிதிகள் உள்ளன. கோவிந்தபெருமாள் சிவனுக்கு அருகிலேயே சயனித்திருக்கிறார்.

2-வது பிரகாரம் சற்று பெரியது. இங்கு ஏழிசை சுரங்கள் இசைக்கும் தூண்கள் உள்ளன. அவற்றை தட்டிப்பார்த்தால் சுரங்களின் ஒலி கேட்கும். இந்த பிரகாரத்தில் தான் தாமிரசபை உள்ளது. 63 நாயன்மார்களின் சிலைகள், அஷ்டலட்சுமி, சனீ்ஸ்வரர், சகஸ்ரலிங்கம் ஆகிய சிலைகளும் இருக்கின்றன.

3-வது பிரகாரம் மிகவும் பெரியது. 3 யானைகள் கூட இதில் சேர்ந்து நடக்கலாம். அவ்வளவு அகலம் கொண்டது. இந்த பிரகாரத்தில் இருந்து அம்மன் மண்டபம் வழியாக அம்மன் சன்னிதிக்கு செல்லலாம். இங்கு ஆஞ்சநேயர், அய்யப்பன், வடிவு அம்மன், சரஸ்வதி, பிரம்மா ஆகியோருக்கு தனி சன்னிதிகள் இருக்கின்றன. கோவிலின் மிகப்பெரிய உள்தெப்பம் இருக்கிறது.

இந்த 3-வது பிரகாரத்தில் முருகப்பெருமானுக்கு தனியாக பெரிய சன்னதி உள்ளது. ஆறுமுகமாய், மயில் வாகனனாய் வள்ளி, தெய்வானையுடன் சந்தனக்காப்பில் நின்று அருள்புரிகிறார் முருகன். இந்த கோவிலில் உள்ள விநாயகர் பொல்லாப் பிள்ளையார் என்றும், முருகப்பெருமான் ஆறுமுகப்பெருமான் என்றும் அழைக்கப்படுகின்றனர். இக்கோவிலில் சிவபெருமான் நெல்லையப்பராக காட்சி அளிக்கிறார். அன்னை காந்திமதி அம்பாள் தனி சன்னிதியில் வீற்றிருக்கிறார். நெல்லையப்பர் கோவில் இரு மூலவரை கொண்ட துவிம்மூர்த்தி என்ற வகை கோவில் ஆகும். இரு மூலவர்களாக சுவாமி நெல்லையப்பர் லிங்க வடிவத்திலும், கோவிந்தராஜர் சயன கோலத்திலும் அருகருகே தனித்தனி சன்னிதிகளில் பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள முக்கிமான 5 சிவசபைகளில் நெல்லையில் உள்ள நெல்லையப்பர் காந்திமதி கோவில் தாமிர சபையை கொண்ட முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. சிவபெருமான் நடனமாடிய 5 முக்கிய தலங்களில் நெல்லையப்பர் கோவில் திருத்தலமும் ஒன்று என்பது சிறப்பு.

வியப்பை ஏற்படுத்தும் கோபுரங்கள்

நெல்லையப்பர் கோவிலில் தெற்கு பிரகாரத்துக்கு நடுவே தட்சணாமூர்த்தி சன்னதிக்கு முன்னதாக சங்கிலி மண்டபம் எனும் அற்புதமான கலை நுட்பத்துடன் கூடிய பகுதி அமைந்துள்ளது. அதை ஒட்டி நடுகோபுரமும் கொள்ளை அழகு. பிரகார மண்டபத்தில் உயரமாக பெரிய கல்தூண்கள் அந்த இடத்தையே அழகூட்டி காட்டுகின்றன.

கோவிலில் உள்ள தெற்கு பிரகாரம் சுமார் 387 அடி நீளம் கொண்டதாகவும், சுமார் 42 அடி அகலம் கொண்டதாகவும் அமைந்துள்ளது. இந்த பகுதியில் கோவிலுக்கு திருப்பணி செய்தவர்களும், மன்னர் பெருமக்களும் சிலையாக காட்சி தருகின்றனர்.

இதைபோல் மேற்கு பிரகாரமும் பிரமிக்கத்தக்கது. இது சுமார் 285 அடி நீளம் கொண்டதாகவும், சுமார் 40 அடி அகலம் கொண்டதாகவும் அமைந்து பிரம்மாண்டமாக காட்சி தருகிறது. இதன் நடுவே மேலகோபுரம் அமைந்துள்ளது. இங்கே உள்ள சுதை வடிவிலான பிள்ளையார் நம்மை கொள்ளை கொள்கிறார். சுமார் 387 அடி நீளமும் 42 அடி அகலமும் கொண்டு அமைந்திருக்கிறது வடக்கு பிரகாரம். இந்த பிரகாரத்தில் நின்றசீர் நெடுமாறன் அரங்கம் அமைந்துள்ளது. மேலும் சுவாமிக்கு அபிஷேகத்திற்கு எடுக்கப்படும் ஆறுகால தீர்த்தக்குண்டம் இங்கே உள்ளது.

அடுத்து ஈசான மூலையில் யானை கூடம் அமைந்துள்ளது. கிழக்கு பிரகாரம் சுமார் 295 அடி நீளத்திலும் 40 அடி அகலத்திலும் அமைந்துள்ளது. இதன் வடக்கு பக்கம் 78 தூண்களுடன் சோமவாரம் மண்டபம் அமைந்துள்ளது.

நெல்லையப்பர் சன்னதியை ஒட்டி நுழைவாயில் கோபுரமும், அதேபோல் காந்திமதி அம்பாள் சன்னதியை ஒட்டி நுழைவாயில் கோபுரமும் அமைந்துள்ளது. இந்த சிறப்புமிக்க 2 கோபுரங்களும் பார்க்கவே அவ்வளவு வியப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

அற்புதம் மிக்க இசைக்கல்வெட்டு

இந்த கோவிலில் கிழக்கு நோக்கிய சன்னிதி வாயிலின் இருபக்கமும் துவார பாலகர்கள் காவல்புரிய, உள்ளே கருவறையில் வெட்டுப்பட்ட லிங்கத்திருமேனியாய் காட்சி அளிக்கிறார் நெல்லையப்பர். பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த நெல்லையப்பர் கோவில் பல கட்டங்களில் பல மன்னர்களால் கட்டப்பட்டது. தற்போது இருக்கும் நிலை வரை நின்றசீர் நெடுமாற பாண்டியனால் கட்டப்பட்டது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் இங்கு வேறு எங்கும் காண முடியாத அற்புதம் மிக்க இசைக்கல்வெட்டு ஒன்று உறைந்து கிடக்கிறது. அது கம்பி வேலியிட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதில் தாளலயம் பற்றியும், தாளத்தில் உள்ள அங்கங்கள் பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன.

சீர் கொண்டு செல்லும் அம்பாள்

பெண்கள் திருமணம் முடிந்து கணவர் வீட்டுக்கு சீர் கொண்டு செல்வது போல் காந்திமதி அம்பாளும் தனது திருக்கல்யாணத்தின் போது சீர் கொண்டு செல்கிறாள்.

ஐப்பசி பிரம்மோற்சவத்தின் முதல் 10 நாட்கள் அம்பாள் சிவனை மணக்க வேண்டி தவமிருபார். 10-ம் நாளில் கம்பை நதிக்கு எழுந்தருள்வார். 11-ம் நாள் மகாவிஷ்ணு தன் தங்கையை மணந்து கொள்ளும்படி சிவனை அழைப்பார். சிவனும் அவரது அழைப்பை ஏற்று அம்பாளை மனம் செய்வார். திருக்கல்யாணத்தின்போது அம்மன் சீர் கொண்டு செல்கிறார். அப்போது பக்தர்கள் மணமக்களுக்கு திருமண ஆடைகள் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது.

பெருமை சேர்க்கும் மண்டபங்கள்

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் பெருமை சேர்க்கும் வகையில் பல மண்டபங்கள் உள்ளன.

அவைகளின் விவரங்கள்:-

ஆயிரம் கால் மண்டபம்

இந்த மண்டபம் 520 அடி நீளமும் 63 அடி அகலமும், ஆயிரம் தூண்களையும் கொண்டுள்ளது. மண்டபத்தின் உச்சிஷ்ட கணபதி நம்மை ஈர்க்கும் தோற்றமுடையது. திருக்கல்யாணம் நடைபெறும் மண்டபம் கீழ்ப்பகுதியில் ஆமை ஒன்றினால் தாங்கப்படுவது போன்ற வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது. மகாவிஷ்ணுவே ஆமை வடிவத்தில் வந்து இறைவனை பூஜிப்பதாக ஐதீகம்.

ஊஞ்சல் மண்டபம்

96 தத்துவங்கள் தெரிவிக்கும் விதமாக 96 தூண்களை உடையது இந்த மண்டபம். திருக்கல்யாண வைபவம் முடிந்த பின் சுவாமி அம்பாள் ஊஞ்சலில் அமர்ந்த கோலமும், ஆடி மாத வளைகாப்பு திருவிழாவும் இந்த மண்டபத்தில் தான் நிகழும். இங்குள்ள யாளி சிற்பங்கள் சிறப்புடையவை.

சோமவார மண்டபம்

இந்த மண்டபம் சுவாமி கோவிலில் வட பக்கத்தில் அமைந்துள்ளது. கார்த்திகை சோமவார நாளில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நிகழும் மண்டபம். தற்பொழுது நவராத்திரிக்கு இங்கு வைத்து பூஜை நிகழ்கிறது. இந்த மண்டபம் 78 தூண்களை உடைய பெரிய மண்டபம் ஆகும்.

சங்கிலி மண்டபம்

சுவாமி கோவிலையும் அம்மன் கோவிலையும் இணைப்பதால் இந்த மண்டபம் சங்கிலி மண்டபம் என பெயர் பெற்றுள்ளது. 1647-ம் ஆண்டு வடமலையப்ப பிள்ளையன் அவர்களால் கட்டப்பட்டது. இந்த மண்டபத் தூண்களில் வாலி, சுக்ரீவன், புருஷாமிருகம், பீமன், அர்ச்சுனன் சிலைகள் கண்ணை கவரும்.

மணிமண்டபம்

இந்த மண்டபத்தின் மத்தியில் பெரிய மணி ஒன்று தொங்குவதால் மணிமண்டபம் என்று பெயர் பெற்றது. நின்றசீர் நெடுமாற மன்னரால் உருவாக்கப்பட்டது இந்த மண்டபம். ஒரே கல்லில் சுற்றி சுற்றி பல சிறு தூண்கள் உள்ளன. ஒவ்வொரு சிறிய தூணை தட்டினாலும் ஒவ்வொரு வாத்திய ஒலி தோன்றும். சுவரங்கள் மாறுபட்டு வரும். மரக்கட்டையில் மான் கொம்பு மாட்டி தட்டினால் அற்புதமான, சரியான சுவரம் கிடைக்கும். மொத்தம் 48 சிறிய தூண்கள் உள்ளன. தமிழ்நாட்டின் இசைத்தூண்கள் அமைந்துள்ள திருக்கோவில்களில் காலத்தால் முற்பட்ட இசை தூண்கள் இவை என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.

வசந்த மண்டபம்

100 தூண்களை உடைய இந்த மண்டபத்தில் கோடைகாலத்தில் வசந்த விழா நடைபெறும். சுற்றிலும் சோலையாய் மரங்கள் உள்ளன. இந்த சோலைவனம் 1756-ம் ஆண்டு திருவேங்கிட கிருஷ்ண முதலியார் அவர்களால் அமைக்கப்பட்டது.

சிறப்பு பெற்ற சிற்ப தூண்கள்

நெல்லையப்பர் கோவில் தூண்கள் அனைத்தும் சிற்ப வேலைபாடுகள் நிறைந்துள்ளன. ஒரு தோளில் கைக் குழந்தையை வைத்துக்கொண்டு மறுபக்கம் தன் பெரிய பிள்ளைக்கு சோறு ஊட்டும் அன்புத்தாய், அன்பர்களுக்கு அருள் பாலிக்கும் ஆஞ்சநேயர், மனைவியை வெளியே அழைத்து செல்லும் அக்கால கணவன்-மனைவியின் தோற்றம், ஐந்தறிவு ஜீவனுக்கும் தன் குழந்தை என்றால் கொள்ளை பிரியம் தான் என்பதை உணர்த்தும் சிற்பம், குழந்தை கண்ணனை கொல்ல வந்து கண்ணனால் கொல்லப்பட்ட அரக்கி கையில் குழந்தையுடன், வீரபத்திரர், கர்ணன், அர்ஜுனன் போன்ற ஒரு சிற்பங்கள் அவற்றில் செய்யப்பட்டுள்ள நுண்ணிய வேலைபாடுகள் காண்போரின் மனதை கொள்ளை கொள்ள செய்யும்.

இந்த சிற்பங்களில் எலும்பு, நரம்பு, நகம் தெரிகிறது. அச்சிலைகள் அணிந்துள்ள அணிகலன்களின் வடிவங்கள், கை, கால், முட்டிகள், கண்களில் தெரியும் ஒளி என அவை சிலைகள் அல்ல உயிருடன் வந்த கலை என்ற எண்ணம் நமக்கு தோன்றும்.

Tags:    

Similar News