தீ விபத்தில் பெண் உடல் கருகி பலி- சமையல் செய்த போது விபரீதம்
- தீக்காயங்களுடன் துடித்து கொண்டு இருந்த புஷ்பலதாவை மீட்டு கோபிசெட்டி பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- கோபி செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள பொம்மநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் புஷ்பலதா (வயது 56). இவர் கூலி தொழில் செய்து வந்தார்.
இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் வெளியூர்களில் தங்கி வேலை செய்து வருகிறார்கள். இதையடுத்த புஷ்பலதா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று புஷ்பலதா வீட்டின் கதவை உள் பக்கமாக மூடி கொண்டு கியாஸ் அடுப்பு பற்ற வைத்து சமையல் செய்து கொண்டு இருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அடுப்பில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டு திடீரென கியாஸ் வெடி த்தது. இதையடுத்து கியாசில் தீ பற்றி எரிந்தது. இதில் புஷ்பலதா சேலையில் தீ பிடித்து அவரது முகம், கை, கால் மற்றும் உடலில் தீ காயம் ஏற்பட்டது. இதனால் அவர் அலறி துடித்தார்.
இதையடுத்து அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கதினர் அவரது வீட்டுக்கு வந்தனர். அப்போது கதவு உள்பக்கமாக மூடப்பட்டு இருந்ததால் அவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை.
இதை தொடர்ந்து பொது மக்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து தீக்காயங்களுடன் துடித்து கொண்டு இருந்த புஷ்பலதாவை மீட்டு கோபிசெட்டி பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது பற்றி தகவல் கிடை த்ததும் கோபிசெட்டி பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் தீயணைப்பு வீரர்கள் கியாசை அப்புறப்படுத்தி தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
இந்நிலையில் கோபி செட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த புஷ்பலதா மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி புஷ்பலதா இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கோபி செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.