கிரிக்கெட்

ரிசர்வ் டே, டி.ஆர்.எஸ். முறைகள் அறிமுகம்: டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி ஜூன் 12-ந்தேதி தொடக்கம்

Published On 2023-05-30 09:48 GMT   |   Update On 2023-05-30 09:48 GMT
  • இந்த சீசனில் முதன்முதலாக டி.ஆர்.எஸ். முறை பயன்படுத்தப்பட உள்ளது.
  • இந்த முறை டிஜிட்டல் தளத்திலும் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

நெல்லை:

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 7-வது சீசன் வருகிற ஜூன் 12-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கி ஜூலை 12-ந் தேதி வரை நடக்கிறது.

இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், சீகம் மதுரை பேந்தர்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ், லைகா கோவை கிங்ஸ், ஐ டிரீம் திருப்பூர் தமிழன்ஸ், பால்சி திருச்சி ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த போட்டிகள் அனைத்தும் கோவை, திண்டுக்கல், சேலம், நெல்லையில் நடக்கிறது.

கோவையில் வருகிற 12-ந்தேதி நடக்கும் முதல் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியும், ஐ டிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி உள்பட கோவையில் 6 ஆட்டங்களும், திண்டுக்கல்லில் 7 ஆட்டங்களும், சேலத்தில் 8 ஆட்டங்களும் நடத்தப்படுகிறது. நெல்லையில் 9 போட்டிகள் நடத்தப்படுகிறது.

நெல்லையில் ஜூலை 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கும் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், திருச்சி அணியும் மோதுகின்றன.

இதுகுறித்து தமிழ்நாடு கிரிக்கெட் கழக உதவி செயலாளர் ஆர்.என்.பாபா நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

கிராமப்புறங்களில் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் மாவட்டங்களில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகிறது. டி.என்.பி.எல். போட்டியின் ப்ளே-ஆப் மற்றும் இறுதிப்போட்டி உள்பட 32 போட்டிகள் 25 நாட்களில் நடத்தப்படுகிறது. குவாலிபையர்- 1 மற்றும் எலிமினேட்டர் சுற்று சேலத்திலும், குவாலிபையர்- 2 மற்றும் இறுதிப்போட்டி நெல்லையிலும் நடத்தப்படுகிறது.

இந்த சீசனில் முதன்முதலாக டி.ஆர்.எஸ். முறை பயன்படுத்தப்பட உள்ளது. போட்டிக்கான சாதாரண டிக்கெட் ரூ.200-க்கும், உணவு வசதியுடன் கூடிய டிக்கெட் ரூ.1,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 90 சதவீதம் டிக்கெட் விற்பனை ஆன்லைனில் நடத்தப்பட உள்ளது. கவுண்டர்களில் குறைந்தபட்ச டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த முறை டிஜிட்டல் தளத்திலும் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மழையினால் நாக்-அவுட் மற்றும் இறுதிப்போட்டிகள் தடைபடாமல் இருக்க ரிசர்வ் டே முறை வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. ஐ.பி.எல். போட்டிகளை போல் ரிசர்வ் டே வழிமுறையும் இந்த ஆண்டு முதல் கடைபிடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முறை டி.ஆர்.எஸ். நடைமுறையும் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ், ஸ்டார் ஸ்போட்ஸ் 1 ஹச்.டி. ஆகிய சேனல்களில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நெல்லை கிரிக்கெட் கழக தலைவர் சரவணமுத்து, செயலாளர் ராம்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News