கிரிக்கெட்

பேஸ்புக் நேரலையில் பேசுகிறார்... டோனி வெளியிடும் முக்கிய அறிவிப்பு என்ன? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

Published On 2022-09-25 05:47 GMT   |   Update On 2022-09-25 05:47 GMT
  • எம்.எஸ்.டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக உள்ளார்.
  • டோனி ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலக போவதாக சிலர் பதிவிட்டனர்.

ராஞ்சி:

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனி. சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்ட அவர் ஐ.பி.எல் போட்டியில் விளையாடி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக உள்ளார்.

இந்த நிலையில் டோனி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் இன்று (25-ந்தேதி) மதியம் 2 மணிக்கு உங்கள் அனைவருடனும் சில உற்சாகமான தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறி இருந்தார்.

பேஸ்புக்கில் நேரலையில் ரசிகர்களை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார். இதனால் ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. டோனி வெளியிடும் முக்கிய தகவல் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதித்தனர். டோனி ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலக போவதாக சிலர் பதிவிட்டனர்.

டோனி புதிய தொழில் தொடங்குவது அல்லது சினிமா படம் தயாரிப்பது பற்றி தகவல் தெரிவிப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு டோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் அதை பற்றி தெரிவிப்பார் என்றும் ரசிகர்கள் கணித்து இருக்கிறார்கள்.

அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் டோனி விளையாடுவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்து இருந்தது. உள்ளூர் ரசிகர்கள் முன்பு விடைபெற விரும்புகிறேன் என்று டோனியும் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News