கிரிக்கெட்

டிஎன்பிஎல்- திருப்பூர் அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது மதுரை பாந்தர்ஸ்

Published On 2023-07-04 17:31 GMT   |   Update On 2023-07-04 17:31 GMT
  • 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்கியது.
  • திருப்பூர் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நெல்லையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சீகம் மதுரை பாந்தர்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற திருப்பூர் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்ய, மதுரை அணி முதலில் பேட்டிங் செய்தது.

பிளே ஆப் சுற்றுக்கு சிக்கலின்றி முன்னேறுவதற்கு இப்போட்டியில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் பேட்டிங் செய்த மதுரை அணி கவனமாக ஆடியது.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துவக்க வீரர்கள் ஹரி நிசாந்த் 34 ரன்களும், சுரேஷ் லோகேஷ்வர் 44 ரன்களும் சேர்த்து நம்பிக்கை அளித்தனர்.

ஆதித்யாவும் தன் பங்கிற்கு 37 ரன்கள் குவித்து ஸ்கோரை உயர்த்தினார். இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் குவித்தது. திருப்பூர் அணி தரப்பில் திரிலோக் நாக் 2 விக்கெட் எடுத்தார்.

இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்கியது.

இதில், துஷர் ரஹேஜா அரை சதம் அடித்து 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து, விஜய் சங்கர் 28 ரன்களிலும், விஷால் வைத்யா 21 ரன்களிலும், ராஜேந்திர விவேக் மற்றும் பால்சந்தர் அனிருத் தலா 11 ரன்களிலும், சதுர்வேதி ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியாக விளையாடிய புவனேஸ்வரன் 18 ரன்களும், கோகுல்மூர்த்தி ஒரு ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.

இதனால், திருப்பூர் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

இந்த போட்டியின் வெற்றியின் மூலம் மதுரை பாந்தர்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

Tags:    

Similar News