கிரிக்கெட்

ரிஷப் பண்ட்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி- தொடரை கைப்பற்றியது

Published On 2022-08-06 19:08 GMT   |   Update On 2022-08-06 19:12 GMT
  • இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 44 ரன்கள் குவித்தார்.
  • வெஸ்ட் இண்டீஸ் அணி 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான 4வது டி20 கிரிக்கெட் போட்டி லாடர்ஹில் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா 16 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 33 ரன்கள் விளாசினார்.

சூரியகுமார் யாதவ் 14 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 24 ரன்கள் சேர்த்தார். ரிஷப் பண்ட் 31 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரியுடன் 44 ரன்கள் குவித்தார். தீபக் (21), தினேஷ் கார்த்திக் (6), சஞ்சு சாம்சன் (30 நாட் அவுட்), அக்சர் பட்டேல் 20 ரன்கள் (நாட் அவுட்) சேர்க்க, 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் சேர்த்தது.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஓபட் மெக்காய், அல்சாரி ஜோசப் தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 192 ரன்கள் என்ற இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் விளையாடியது. அந்த அணியின் தொடக்க வீரர் பிரான்டன் கிங் 13 ரன்னுடன் வெளியேறினார். கெயில் மேயர்ஸ் 14 ரன்னுக்கு அவுட்டானார்.

கேப்டன் பூரன் மற்றும் பாவல் ஆகியோர் தலா 24 ரன்கள் அடித்து அவுட்டாகினர். ஹெட்மயர் 19 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். ஹோல்டர் 13 ரன் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 19.1 ஓவர் முடிவில் 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 


இதன் மூலம் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், டி20 தொடரை கைப்பற்றியது. இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்களும், அவேஷ்கான், அக்சர் படேல், ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 

Tags:    

Similar News