கிரிக்கெட்

இம்பேக்ட் பிளேயர் விதி ஆல்-ரவுண்டர்களுக்கு வேட்டு வைத்துவிடும்- ஆடம் வோக்ஸ்

Published On 2024-04-24 11:28 GMT   |   Update On 2024-04-24 11:28 GMT
  • அணிகள் திறமை வாய்ந்த பேட்ஸ்மேன்களை ஏழாவது அல்லது எட்டாவது இடத்தில் கூட பெறுகின்றன.
  • இது கிரிக்கெட்டை மேலும் பொழுதுபோக்காக மாற்றும்.

தொழில்முறை கிரிக்கெட்டில் சுவாரஸ்யத்தை அதிகரிக்க புதிய புதிய விதிகள் கொண்டு வரப்படுகின்றன. பீல்டிங் கட்டுப்பாடுகள் போன்ற விதிகள் இருக்கும் நிலையில் தற்போது இம்பேக்ட் பிளேயர் விதி ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த விதியின்படி ஒரு வீரருக்கு மாற்று வீரராக களம் இறங்கும் நபர் பந்து வீசலாம், பேட்டிங் செய்யலாம். முன்னதாக பீல்டிங் மட்டுமே செய்ய முடியும். இந்த விதியின்படி சேஸிங் செய்யும்போது ஒரு பந்து வீச்சாளருக்குப் பதிலாக மேலும் ஒரு தரமான பேட்ஸ்மேனை களம் இறக்க முடியும். அதேபோல் பந்து வீசும்போது நட்சத்திர பேட்ஸ்மேன்களுக்கு பதில் தரமான பந்து வீச்சாளர்களை தெர்வு செய்யமுடியும்.

நேற்றைய போட்டியில் சென்னை அணியில் சிவம் துபே முதலில் களம் இறங்கினார். ஆனால் 2-வது பேட்டிங் செய்யும்போது இவருக்குப் பதிலாக இம்பேக்ட் பிளேயராக சர்துல் தாகூர் களம் இறங்கினார். எல்எஸ்ஜி அணியில் டி காக் இம்பேக்ட் பிளேயராக களம் இறங்கினார்.

இம்பேக்கட் பிளேயர் விதிக்கு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஏற்கனவே அதிருப்தி தெரிவித்திருந்தார். மேலும் பலர் தங்களது எதிர்ப்பு கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆலோசகராக இருக்கும் ஆடம் வோக்ஸ் இம்பேக்ட் பிளேயர் விதி, ஆல்-ரவுண்டர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆடம் வோக்ஸ் கூறுகையில் "அணியின் ஸ்கோர்கள் உயர்ந்த வண்ணம் உள்ளன. அணிகள் திறமை வாய்ந்த பேட்ஸ்மேன்களை ஏழாவது அல்லது எட்டாவது இடத்தில் கூட பெறுகின்றன. இது கிரிக்கெட்டை மேலும் பொழுதுபோக்காக மாற்றும். ஆனால், ஆல்-ரவுண்டர்களின் திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் ஆட்டத்தில் இருந்து வெளியேற்றுகிறது. ஆல்-ரவுண்டர் எப்போதுமே அணியை சமநிலைப்படுத்துபவராக இருப்பார். ஒருவேளை இம்பேக்ட் பிளேயரோடு முக்கியத்துவம் இல்லாமல் போகலாம்.

இதேபோல் ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக்கில் பவர் சர்ஜ் (Power Surge) கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த விதிப்படி நான்கு ஓவர்தான் பவர்பிளே. அதன்பின் 11-வது ஓவரில் இருந்து இன்னிங்ஸ் முடியும் வரை பேட்டிங் செய்யும் அணி மீதமுள்ள இரண்டு ஓவர்களை எந்த நேரத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த விதியால், சேஸிங் செய்யும்போது எந்த அணியும் போட்டியில் இருந்து வெளியேறியதாக நினைக்க தேவையில்லை. ஆனால், இந்த நேரங்களில் அதிகமாக விக்கெட்டுகளை அணிகள் இழந்துள்ளதை நாம் பார்த்து இருக்கிறோம்.

இவ்வாறு ஆடம் வோக்ஸ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News