கிரிக்கெட் (Cricket)

பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் இடம்- சாதனை படைத்த இலங்கை வீராங்கனை

Published On 2023-07-05 11:31 IST   |   Update On 2023-07-05 11:31:00 IST
  • நியூசிலாந்துக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் 2 சதம் உள்பட 248 ரன்கள் குவித்தார்.
  • இதன் மூலம் அவர் ஒருநாள் போட்டி தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இலங்கை வீராங்கனை என்ற சாதனையை படைத்து உள்ளார்.

துபாய்:

ஒருநாள் போட்டியின் அடிப்படையில் வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்டர்கள் தரவரிசையில் இலங்கை அணியின் கேப்டன் சமாரி அட்டப்பட்டு (758 புள்ளி) 'நம்பர் ஒன்' இடம் பிடித்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் 2 சதம் உள்பட 248 ரன்கள் குவித்து தொடர் நாயகி விருது பெற்றதன் மூலம் சமாரி அட்டப்பட்டு 6 இடங்கள் ஏற்றம் கண்டு முதல்முறையாக அரியணையில் ஏறியுள்ளார்.

இதன் மூலம் அவர் ஒருநாள் போட்டி தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இலங்கை வீராங்கனை என்ற சாதனையை படைத்து உள்ளார். இதற்கு முன்பு ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன் தரவரிசையில் இலங்கை வீரர்களில் ஜெயசூர்யா மட்டும் முதலிடம் (2002, 2003-ம் ஆண்டுகளில் 181 நாட்கள்) பிடித்து இருந்தார்.

ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி (754 புள்ளி), தென்ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் (732 புள்ளி), இங்கிலாந்தின் நாட் சிவெர் (731), ஆஸ்திரேலியாவின் மெக் லானிங் (717), இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர் (716), ஸ்மிர்தி மந்தனா (714) ஆகியோர் தலா ஒரு இடங்கள் சரிந்து முறையே 2 முதல் 7 இடங்களை பெற்றுள்ளனர்.

Tags:    

Similar News