சினிமா
வசூலை குவிக்கும் பத்மாவத் - எதிர்ப்புகளுக்கு மத்தியில் ரூ.100 கோடியை தாண்டியது
வடஇந்தியாவில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் `பத்மாவத்' படம் 4 நாட்களில் ரூ.100 கோடியை தாண்டியிருக்கிறது.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் - ஷாகித் கபூர் நடிப்பில் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வெளியாகியிருக்கும் படம் `பத்மாவத்'.
வடஇந்தியாவில் குஜராத், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பால் படம் அங்கு ரிலீசாகவில்லை. அரியானா, பீகார் மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் குறிப்பிட்ட திரையரங்குகளில் மட்டுமே வெளியான இந்த படம் 4 நாட்களில் ரூ.100 கோடியை வசூல் செய்து புதிய மைல்கல்லை தொட்டுள்ளது.
கடந்த வியாழனன்று வெளியான இந்த படம் முதல் நாளில் ரூ.19 கோடியும், அடுத்தடுத்த நாட்களில் 32 கோடி, 27 கோடி, 31 கோடி என மொத்தமாக ரூ. 114 கோடிகளை வசூல் செய்து ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. அடுத்தடுத்த வாரங்களில் இந்த படத்தின் வசூல் மேலும் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.100 கோடி என்ற மைல்கல்லை தொட்ட தீபிகாவின் 7-வது படம் `பத்மாவத்' என்பது குறிப்பிடத்தக்கது.