சினிமா
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா? - சஞ்சய் தத் விளக்கம்
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா? என்பது குறித்து பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் விளக்கம் அளித்து உள்ளார். #SanjayDutt #LokSabhaElections2019
நாடாளுமன்ற தேர்தலில் மும்பையை சேர்ந்த இந்தி நடிகர் சஞ்சய் தத் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அவர் மறைந்த நடிகரும், காங்கிரஸ் தலைவருமான தனது தந்தை சுனில் தத்தை பின்பற்றி அரசியல் களத்தில் குதிப்பதாக கூறப்பட்டது. அவர் உத்தரபிரதேசத்தில் உள்ள காசியாபாத் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வலம் வந்தபடி இருந்தன.
இந்தநிலையில் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக அவரை மையப்படுத்தி உலா வந்த இந்த தகவல்களுக்கு நடிகர் சஞ்சய் தத் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
நான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக பரவி வரும் தகவல் வெறும் வதந்தி. அதில் உண்மையில்லை. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் எனது சகோதரி பிரியா தத்துக்கு என் ஆதரவு உண்டு. நான் எனது நாட்டின் பக்கம் நிற்பேன். தேர்தலின் போது ஒவ்வொருவரும் வெளியில் வந்து நாட்டிற்காக வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.