சினிமா

பாடல்களுக்கு இளையராஜா ராயல்டி கேட்பது தவறு - எஸ்.ஏ.சந்திரசேகரன்

Published On 2018-12-24 12:36 GMT   |   Update On 2018-12-24 12:36 GMT
பாடல்களுக்கு இசையமைப்பாளர் இளையராஜா ராயல்டி கேட்பது தவறு என்றும், தயாரிப்பாளர்களுக்கே உரிமை உள்ளது என்றும் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறியுள்ளார். #Ilayaraja
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கிறிஸ்தவ மத நல்லிணக்க விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களுக்கு ராயல்டி கோருவது குறித்து நிருபர்கள் கருத்து கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:-

இளையராஜா ராயல்டி கேட்பது ஏற்புடையதல்ல. என்ஜினீயர், மேஸ்திரி, கொத்தனார், கையாள், கார்பெண்டர், பெயிண்டர், என பலரும் சேர்ந்து வீட்டை உருவாக்கினாலும் வேலை முடிந்தவுடன் அந்த வீடு உரிமையாளருக்கு சொந்தமாகும். இது எல்லா தொழிலுக்கும் பொருந்தும்.

படம் தயாரிப்பது கடினமான தொழில், வீட்டை விற்று, நிலத்தை விற்று, அவமானங்களை சந்தித்து படங்களை தயாரிக்கிறார்கள். இதில் துரதிர்ஷ்டம் என்னவென்றால் அதிக படங்கள் தோல்வி அடைந்து விடுகின்றன. அத்தனை இன்னல்களையும் சந்திக்கும் தயாரிப்பாளர்களுக்குதான் பாடல் உரிமை சென்றடைய வேண்டும்.

படத்தில் பணிபுரியும் இயக்குனர், ஒளிப்பதிவாளர், சண்டை இயக்குனர், கலை இயக்குனர், நடிகர், நடிகைகள், எல்லோரும் சம்பளம் வாங்கி கொண்டு வேலை செய்கிறார்கள். இவர்கள் யாருமே ராயல்டி கேட்பதில்லை. அதுபோல்தான் இசையமைப்பாளரும் கேட்பது தவறு. அவருடைய வேலைக்கு என்ன சம்பளமோ அதை வாங்கி விடுகின்றனர். எனவே பாடல்களின் உரிமை தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருக்கவேண்டும். தயாரிப்பாளர்கள் இந்த ராயல்டியை பெற ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்”

இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறினார்.
Tags:    

Similar News