சினிமா
எனது மணப்பெண்ணை தினமும் பார்த்துக்கொண்டிருக்கிறேன் - விஷால்
‘இரும்புத்திரை’ வெற்றி விழாவில் பேசிய நடிகர் விஷால், நான் திருமணம் செய்ய இருக்கும் பெண்ணை தினமும் பார்த்துக் கொண்டுத்தான் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
அண்மையில் வெளியான 'இரும்புத்திரை' படம் டிஜிட்டல் இந்தியாவுக்கு எதிரான படமாக எடுக்கப்பட்டு இருந்தது. ஆதார் அட்டை முதல் தேர்தல் முறை வரை எல்லா மின்னணு செயல்பாடுகளில் இருக்கும் சிக்கல்களை அலசி இருந்தது. படத்தின் கதாநாயகனும் தயாரிப்பாளருமான விஷால் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசினார்.
அப்போது மின்னணி வாக்குப்பதிவு எந்திரம் பற்றி கேட்டபோது, ‘எனக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மீது நம்பிக்கை இல்லை. வாக்குசீட்டு முறையை தான் நம்புகிறேன். என்னிடம் ஆதார் அட்டை இருக்கிறது. ஆனால் இன்னும் வங்கியில் அதை இணைக்கவில்லை. முன்பைவிட இப்போது இன்னும் விழிப்புணர்வோடு இருக்கிறேன்.
மெர்சல் அளவுக்கு இந்த படத்துக்கு பிரச்னை யாரும் பண்ணவில்லையே என்றால் அதற்கு காரணம் நாங்கள் உண்மையை தான் சொல்லி இருக்கிறோம் என்று அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளார்கள் என்று பொருள்’ என்று பதிலளித்தார். விஷால் அடுத்து அரசியலுக்கு வரும் திட்டத்தில் இருக்கிறார்.
அதற்கு முன்பாக ஜனவரியில் நடிகர் சங்க கட்டடம் கட்டப்பட்டு அடுத்த முகூர்த்த நாளிலேயே அங்கே தனது திருமணம் நடக்கும் என்றும் கூறினார். மணப்பெண் யார் என்று கேட்டதற்கு ‘அவரை தினமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்’ என்று மறைமுகமாக சொன்னார். விஷாலும் வரலட்சுமியும் காதலிப்பதாக சில ஆண்டுகளாகவே கிசுகிசுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.