கார்களில் எத்தனால் என்ஜின் - தனி ஸ்கெட்ச் போடும் மாருதி சுசுகி
- மாருதி சுசுகி நிறுவனம் எத்தனால் கொண்டு இயங்கும் வகையிலான என்ஜின்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- ஏற்கனவே மாருதி சுசுகி தனது கார்களை தொடர்ந்து CNG கிட் கொண்ட வேரியண்ட்களில் அறிமுகம் செய்து வருகிறது.
ஆட்டோமொபைல் சந்தையில் பல்வேறு நிறுவனங்களும் எலெக்ட்ரிக் யுத்திக்கு மாறி வருவதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், பலரும் எதிர்பாராத வகையில் மாருதி சுசுகி மாற்று எரிபொருள் பக்கம் கவனம் செலுத்தி வருகிறது. ஏர்கனவே CNG மூலம் இயங்கும் கார்களை அறிமுகம் செய்து வரும் மாருதி சுசுகி தற்போது எத்தனால் மூலம் ஓடும் என்ஜின்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் E85 அதாவது 85 சதவீத எத்தனால் மூலம் இயங்கும் என்ஜின்களை உருவாக்கும் பணிகளை துவங்கி விட்டது. இந்த என்ஜின்கள் ஏப்ரல் 2023 வாக்கில் பயணிகள் வாகனங்களில் பயன்படுத்த ஏதுவாக இருக்கும் என மாருதி சுசுகி நிறுவனத்தின் மூத்த தொழில்நுட்ப அதிகாரி சிவி ராமன் தெரிவித்து இருக்கிறார்.
இத்தனை ஆண்டு காலமாக மாருதி சுசுகி நிறுவன வாகனங்களில் மிக முக்கிய அம்சமாக மைலேஜ் விளங்கி வருகிறது. அந்த வரிசையில் E20 எரிபொருள் பயன்படுத்துவது நல்ல பலன்களை கொடுக்கும். உலகின் E85 ரக என்ஜின்களை பிஎஸ் 6 புகை விதிகளுக்கு உட்பட்டு பயன்படுத்தும் முதல் நாடாக இந்தியா இருக்கும். உலகின் மற்ற நாடுகளில் E85 என்ஜின்கள் பிஎஸ் 4 புகை விதிகளுக்கு உட்பட்டு உருவாக்கப்பட்டு இருக்கின்றன.
தற்போது இந்தியாவில் பயன்படுத்தப்படும் எரிபொருள்களில் 10 முதல் 15 சதவீதம் எத்தனால் சேர்க்கப்பட்டு இருக்கிறது. எனினும், 20 முதல் 25 சதவீத எத்தனால் மூலம் இயங்க வைக்க என்ஜின்களில் மாற்றம் செய்யப்பட வேண்டியது அவசியம் ஆகும். இதற்காக ECU ரிமேப்பிங், இன்ஜெக்ஷன் மற்றும் இக்னிஷன் சிஸ்டம் உள்ளிட்டவைகளில் மாற்றம் செய்ய வேண்டும்.