விற்பனையில் புது மைல்கல் எட்டிய மாருதி கார்
- ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.
- பாதுகாப்பு அம்சங்களால் இளம் வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது.
இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசுகி, தனது அரீனா ஃபிளாக்ஷிப் தயாரிப்பான விக்டோரிஸ் SUV-ஐ செப்டம்பர் 2025-ல் அறிமுகப்படுத்தியது. அறிமுகமானது முதல் இந்த மாடல் அபார வரவேற்பை பெற்று, இந்திய கார் ஆஃப் தி இயர் (ICOTY) விருதை வென்றது.
மேலும், நிறுவனத்தின் விற்பனை அட்டவணையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த சாதனையின் மூலம், வெளியான ஐந்தே மாதங்களுக்குள் விக்டோரிஸ் மாடல் 50,000 யூனிட்கள் என்ற மைல்கல்லை தொட்டுள்ளது. இது இந்திய SUV சந்தையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.
கிராண்ட் விட்டாரா SUV-ஐ அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட விக்டோரிஸ், இந்திய சந்தையில் ரூ.10.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) தொடக்க விலையில் கிடைக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல், CNG மற்றும் ஹைபிரிட் பவர்டிரெயின் ஆப்ஷன்கள் உள்ளிட்ட ஆறு வேரியண்ட்களில் வருகிறது. இந்த மாடல் நவீன வடிவமைப்பு, சிறந்த எரிபொருள் திறன் மற்றும் பாதுகாப்பு அம்சங்களால் இளம் வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது.
இதன் ஹைப்ரிட் வேரியண்ட் சுற்றுச்சூழல் உணர்வுள்ள டிரைவர்களுக்கு சிறந்த தேர்வாக உள்ளது, இது மாருதி சுசுகியின் பசுமை இயக்கத்திற்கு பொருந்துகிறது. விற்பனை எண்ணிக்கையை பொறுத்தவரை, விக்டோரிஸ் இந்த ஆண்டை 15,240 யூனிட்கள் பதிவு செய்து வலுவாகத் தொடங்கியுள்ளது.
அறிமுகமானதில் இருந்து ஒவ்வொரு மாதமும் 12,000 முதல் 14,000 யூனிட்கள் வரை நிலையான விற்பனையை விக்டோரிஸ் பதிவு செய்து, மாருதி சுசுகியின் சிறந்த விற்பனையான SUVகளில் ஒன்றாக திகழ்கிறது. இந்த வெற்றி, போட்டி நிறைந்த இந்திய SUV சந்தையில் - டாடா நெக்சான், ஹூண்டாய் கிரெட்டா போன்ற மாடல்களுக்கு இடையே - விக்டோரிஸ் தனித்து நிற்க உதவியுள்ளது.