கார்

இந்தியாவில் கார் மாடல்களை ரிகால் செய்யும் மாருதி சுசுகி - ஏன் தெரியுமா?

Published On 2023-01-18 14:57 GMT   |   Update On 2023-01-18 14:57 GMT
  • மாருதி சுசுகி நிறுவன கார் மாடல்களில் குறைபாடு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.
  • குறைபாடு கண்டறியப்பட்ட யூனிட்களை வைத்திருப்போர் அதனை இயக்க வேண்டாம் என மாருதி சுசுகி தெரிவித்து இருக்கிறது.

மாருதி சுசுகி நிறுவனம் 17 ஆயிரத்திற்கும் அதிக கார்களை ரிகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. டிசம்பர் 8, 2022 முதல் ஜனவரி 12, 2023 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட கார்கள் ரிகால் செய்யப்படுகின்றன. கார்களின் ஏர்பேக் கண்ட்ரோலர் தவறுதலாக பொருத்தப்பட்டதால் ரிகால் செய்யப்பட உள்ளன.

ஆல்டோ கே10, எஸ் பிரெஸ்ஸோ, ஈகோ, பிரெஸ்ஸா, பலேனோ மற்றும் கிராண்ட் விட்டாரா போன்ற மாடல்கள் இந்த பிரச்சினையில் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கண்டறியப்பட்டு இருக்கும் 17 ஆயிரத்து 362 யூனிட்களையும் ரிகால் செய்து, அதில் உள்ள பிரச்சினையை கண்டறிந்து இலவசமாக சரி செய்து கொடுப்பதாக மாருதி சுசுகி அறிவித்து இருக்கிறது.

பிரச்சினை சரி செய்யப்படவில்லை எனில், கார் விபத்தில் சிக்கும் போது அதில் உள்ள ஏர்பேக் வேலை செய்யாத நிலை ஏற்படும் என மாருதி சுசுகி சந்தேகிக்கிறது. வொர்க்ஷாப்களில் இருந்து தொடர்பு கொள்ளும் வரை அல்லது பிரச்சினையை சரி செய்து முடிக்கும் வரை காரை இயக்க வேண்டாம் என மாருதி சுசுகி தனது வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.

கடந்த மாதம் தான் கிராண்ட் விட்டாரா, XL6, எர்டிகா மற்றும் சியாஸ் போன்ற மாடல்களில் சீட் பெல்ட் குறைபாடு காரணமாக மாருதி சுசுகி ரிகால் செய்தது. இந்த பிரச்சினையில் சுமார் 9 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் பாதிக்கப்பட்டு இருந்தன. இது மட்டுமின்றி கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் வேகன் ஆர், இக்னிஸ் மற்றும் செலரியோ மாடல்களின் 9 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் ரிகால் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News