கார்

ஒரே நிமிடத்தில் 25 ஆயிரம் யூனிட்கள் - முன்பதிவில் மாஸ் காட்டிய மஹிந்திரா ஸ்கார்பியோ N

Published On 2022-08-01 08:47 GMT   |   Update On 2022-08-01 08:47 GMT
  • மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்கார்பியோ N மாடல் முன்பதிவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
  • இந்த மாடலின் வினியோகம் செப்டம்பர் மாத வாக்கில் துவங்க இருக்கிறது.

மஹிந்திரா நிறுவனத்தின் புதிய ஸ்கார்பியோ N மாடலுக்கான முன்பதிவு ஜூலை 30 ஆம் தேதி துவங்கியது. முன்பதிவு துவங்கிய ஒரே நிமிடத்தில் புதிய ஸ்கார்பியோ N காரை வாங்க 25 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடலுக்கான வினியோகம் செப்டம்பர் 26 ஆம் தேதி துவங்குகிறது. இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் நாடு முழுக்க 20 ஆயிரம் யூனிட்களை வினியோகம் செய்து விட மஹிந்திரா நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

வினியோகத்தில் ஸ்கார்பியோ N Z8L வேரியண்டிற்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்கப்பட இருக்கிறது. ஆகஸ்ட் மாத இறுதியில் வினியோகம் பற்றிய தகவல்கள் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்படும் என மஹிந்திரா அறிவித்து இருக்கிறது. புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ N வேரியண்ட்களின் விலை முதல் 25 ஆயிரம் யூனிட்களுக்கு மட்டுமே பொருந்தும்.


முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் தாங்கள் தேர்வு செய்த நிறம் மற்றும் வேரியண்ட் போன்ற விவரங்களை ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் மாற்றிக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் தேர்வு செய்யப்படும் வேரியண்ட் மற்றும் நிறம் இறுதியானது ஆகும். இந்த தேதிக்கு பின் வேரியண்ட் மற்றும் நிறங்களை மாற்றிக் கொள்ள முடியாது.

புதிய காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு எளிய நிதி சலுகைகளை வழங்கும் நோக்கில் மஹிந்திரா நிறுவனம் தனியார் நிதி நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. அதன்படி ஸ்கார்பியோ N மாடலை வாங்குவோர் 6.99 சதவீத வட்டியில் மாதாந்திர தவணையை பெறலாம். இத்துடன் காரின் ஆன் ரோடு கட்டணத்தில் 100 சதவீதம் வரை நிதி சலுகை வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News