கார்
மின்சார வாகன உற்பத்தியின் மையமாக இந்தியா மாறும்- ஸ்கோடா சி.இ.ஓ உறுதி
மக்களுக்கு உயர்ந்த தொழில்நுட்பம் கொண்ட மலிவு விலை கார்களை ஸ்கோடா இந்தியா தயாரித்து வழங்கும் என அந்நிறுவனத்தின் சி.இ.ஓ கூறியுள்ளார்.
இந்தியா மலிவு விலை மின்சார வாகன உற்பத்தியின் மையமாக விரைவில் மாறும் என ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் தலைமை அதிகாரி தாமஸ் ஷ்கேஃபர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய இந்தியாவில் அதிக முதலீடுகளை செய்கின்றனர். குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் வாகன உற்பத்தியில் இந்தியா முக்கிய சக்தியாக விளங்குகிறது.
உலகம் முழுவதும் பல பகுதிகளில் மலிவு விலை மின்சார வாகனங்களின் தேவை அதிகரித்துள்ளது. அந்த தேவையை இந்தியாவில் இருந்து நாங்கள் பூர்த்தி செய்வோம். 2030-ம் ஆண்டுக்குள் மின்சார கார்கள் அதிக அளவில் புழக்கத்திற்கு வரும் என பலரும் கூறுகின்றனர். இன்னும் 2 ஆண்டுகளில் மின்சார கார்களின் விற்பனை அதிகரிக்கப்போகிறது.
மக்களுக்கு உயர்ந்த தொழில்நுட்பம் கொண்ட மலிவு விலை மின்சார கார்களை ஸ்கோடா இந்தியா தயாரித்து வழங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.