கார் மாடிஃபை செய்தது குற்றமா - ஆறு மாதம் சிறையில் அடைக்கப்பட்ட நபர்?
- மஹிந்திரா நிறுவனத்தின் தார் எஸ்யுவி மாடல் அதன் ஆஃப் ரோடிங் அம்சங்களுக்கு பெயர் பெற்ற கார் ஆகும்.
- அதிக மாற்றங்கள் கொண்ட புதிய தார் மாடலை மஹிந்திரா சமீபத்தில் அறிமுகம் செய்தது.
மஹிந்திரா நிறுவனத்தின் தார் மாடலை வாங்கி பயன்படுத்தி வந்த நபர் ஆறு மாதங்கள் சிறை தண்டனைக்கு ஆளாகி இருக்கிறார். காஷ்மீரை சேர்ந்த ஆதில் ஃபரூக் பட் என்ற நபர் தனது தார் மாடலை சட்டவிரோதமாக மாடிஃபை செய்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆதில் ஃபரூக் பட்-க்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்து ஸ்ரீநகர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
இதோடு தார் மாடலில் மேற்கொள்ளப்பட்டு இருந்த மாடிஃபிகேஷன்கள் அனைத்தையும் திரும்ப பெறவும், காரின் முந்தைய நிலைக்கே அதனை மீண்டும் மாற்ற சம்பந்தப்பட்ட போக்குவரத்து அலுவலகங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாக மாடிஃபை செய்யப்படும் வாகனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க ஜம்மு காஷ்மீர் காவல் துறையின் கூடுதல் இயக்குனருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து மாநிலம் முழுக்க சட்டவிரோதமாக மாடிஃபை செய்யப்பட்டு இருக்கும் வாகனங்களை பிடிக்க காவல் துறை சார்பில் புதிதாக செக்போஸ்ட்கள் அமைக்கப்பட உள்ளன. சட்டவிரோதமாக கார் மாடிஃபை செய்த ஆதில் ஃபரூக் பட் கைதாவதை தவிர்க்க ரூ. 2 லட்சத்திற்கு பிராமண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். பின் இரண்டு ஆண்டுகளுக்கு எந்த விதமான சட்டவிரோத செயல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும்.
இரண்டு ஆண்டுகள் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடாமல் நன்னடத்தையை நிரூபிக்கும் பட்சத்தில் ஆதில் ஃபரூக் பட் மீது பதியப்பட்ட வழக்கு முழுமையாக ரத்து செய்யப்படும். எதிர்காலத்தில் ஏதேனும் தவறு செய்யும் பட்சத்தில் ஆதில் ஃபரூக் கைது நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது.