ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் வாகனம் - சூப்பர் அப்டேட் கொடுத்த சித்தார்தா லால்
- ராயல் என்பீல்டு நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் வாகனத்தை வெளியிடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
- புது எலெக்ட்ரிக் வாகனத்திற்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பல்வேறு முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தியாளர்களும் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் கவனம் செலுத்த துவங்கி இருக்கின்றன. இந்த நிலையில், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் வாகனம் வெளியாக மேலும் நான்கு ஆண்டுகள் வரை ஆகும் என ஈச்சர் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் சித்தார்தா லால் தெரிவித்து இருக்கிறார்.
"எலெக்ட்ரிக் வாகன பிரிவு குறித்த திட்டங்கள் உள்ளன. அவற்றை செயல்படுத்த மிக எளிய வழியை தேர்வு செய்ய மாட்டோம். இதன் பின்னணியில் அதிக வேலைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன," என்று அவர் தெரிவித்தார். அந்த வகையில் ராயல் என்பீல்டு பெயரில் முதல் எலெக்ட்ரிக் வாகனம் வெளியாக அதிக ஆண்டுகள் ஆகும் என்றே தெரிகிறது.
"தற்போது ஆரம்பகட்ட ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. சில பிரச்சினைகளை சரி செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. ஆனால் இப்போது வரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. நகர பயன்பாட்டுக்கு எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவது மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும்."
"தற்போதைய பிளாட்பார்மில் எலெக்ட்ரிக் பவர்டிரெயின் வழங்கும் எண்ணம் இல்லை. இது முழுக்க ராயல் என்பீல்டு மாடலாகவே இருக்கும். அறிமுகமாகும் போது சிறப்பான ஒன்றாக இருப்பதோடு, அனைவரின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்றும் வகையிலஅ இருக்கும்," என சித்தார்தா லால் தெரிவித்து இருக்கிறார்.