ஆன்மிக களஞ்சியம்

முத்தாரம்மன் பெயர்க் காரணம்

Published On 2023-08-12 12:18 GMT   |   Update On 2023-08-12 12:18 GMT
  • பாண்டிய மன்னர்கள் முத்துக்களை ஆரமாகத் தொடுத்து அன்னைக்கு சூட்டி மகிழ்ந்தனர்.
  • உயிர்களை மலக் கட்டுகளிலிருந்து விடுவித்தால், உயிர்கள் சீவன் முத்தர்கள் ஆவர்.

முத்தாரம்மன் பெயர்க் காரணம்

அன்னை மகாசக்தி ஒவ்வொரு தலங்களிலும் வெவ்வேறு பெயர்களில் அருள்பாலிக்கிறாள். அந்த வகையில் குலசேகரன் பட்டினம் அம்பாளுக்கு முத்தாரம்மன் என்ற பெயர் எதனால் ஏற்பட்டது என்பது குறித்து பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. அவையனைத்தும் பொருத்தமானதாகவே தெரிகிறது.

"பாண்டி நாடு முத்துடைத்து" என்பார்கள். பாண்டிய மன்னர்கள் முத்துக்களைக் குவித்து தேவியாக நினைத்து வழிபட்டனர். அம்முத்துகள் அம்பாளாகத் திருமேனி கொண்டன. முத்துகளிலிருந்து அன்னை உதித்ததால் முத்தாரம்மன் என அழைக்கப்பட்டாள் என்பது ஒரு கருத்து.

பாண்டிய மன்னர்கள் முத்துக்களை ஆரமாகத் தொடுத்து அன்னைக்கு சூட்டி மகிழ்ந்தனர். எனவே அன்னை, முத்தாரம்மன் எனவும் வழங்கலானாள். கிராமங்களில் அம்மை நோயினை முத்துப் போட்டதாகக் கூறுவது மரபு.

முத்து கண்டவர்கள் இங்கு அம்பாள் பீடத்தை சுற்றி நீர் கட்டச் செய்வர். இதன் மூலம் அம்மை நோய் (முத்துநோய்) குணமாகும். முத்துக்களை ஆற்றிக் குணப்படுத்தியதால் அன்னை, முத்து ஆற்று அம்மன், முத்தாரம்மன் என அழைக்கப்படுகிறாள்.

சிப்பியிலிருந்து விடுபட்டது முத்து. முத்தைச் சிப்பி மூடியிருக் கிறது. உயிர்களை ஆணவ மலம் மூடி மறைத்துள்ளது. உயிர்களை மலக் கட்டுகளிலிருந்து விடுவித்தால், உயிர்கள் சீவன் முத்தர்கள் ஆவர். அம்பாள் சிப்பியிலிருந்து முத்துக்களைப் பிரித்தெடுப்பது போல உலக உயிர்களை மலக்கட்டுகளிலிருந்து பிரித்து ஜுவ முக்தர்களாக மாற்றுகிறாள்.

இதனால் அன்னைக்கு, முத்தாரம்மன் என்ற பெயர் ஏற்பட்டது.  இப்படி முத்தாரம்மன் பெயர் தோன்றியதற்கு பல கதைகள் உள்ளன.

Tags:    

Similar News