search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    முருகன்-தெய்வானை திருமணம்
    X

    முருகன்-தெய்வானை திருமணம்

    • சிவபெருமான் லிங்கத் திருமேனியுடன் அருள் பாலிக்கிறார்.
    • திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்து கொள்வது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    முருகப்பெருமான் அவதாரத்தின் நோக்கமே அசூரன் சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பதுதான். அதன்படி, முருகப்பெருமான் அவதாரம் செய்து, சூரபத்மனை அழித்து, அவனை மயில் மற்றும் சேவலாக மாற்றி, மயிலை வாகனமாகவும், சேவலை கொடியாகவும் ஏற்றுக் கொண்டு அருளினார்.

    சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்ததால் தேவர்கள் துயரம் நீங்கினர். முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தனது மகளாகிய தெய்வயானையை திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். அதன்தொடர்ச்சியாக, முருகப்பெருமான் - தெய்வானை திருமணம் திருப்பரங்குன்றத்தில் இனிதே நடந்தது.

    திருமண விழாவில் பிரம்மா விவாக காரியங்கள் நிகழ்த்த... சூரிய, சந்திரர்கள் ரத்ன தீபங்கள் தாங்கி நிற்க... பார்வதி பரமேஸ்வரர் பரமானந்தம் எய்தி நிற்க... இந்திரன் தெய்வயானையை தாரை வார்த்து கொடுக்க... முருகப்பெருமான், தெய்வயானையைத் திருமணம் செய்து கொண்டதாக கூறுகிறது திருப்பரங்குன்றத்துப் புராணம்.

    இதுவும் நம் உடல் ஆதாரமான மூலாதா ரத்தை நமக்கு உணர்த்துகிறது. மூலாதாரத்தின் தன்மை ``உல்லாசம்'' என்பதாகும்.அது மட்டுமின்றி முருகப்பெருமான் நல்துணை வடிவம் கொண்டு அருள்பாலிப்பதாக ஐதீகம். முருகன் - தெய்வானை திருமணம் இந்த இரண்டையும் உறுதி படுத்துகிறது.

    பாவங்கள் போக்கும் சரவணப்பொய்கை:

    திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் கிழக்கு பக்கம் சரவணப்பொய்கை அமைந்துள்ளது. இந்த தீர்த்தம் முருகனின் கைவேலினால் உண்டானது என்றும் இந்த தீர்த்தத்தைக் கண்டாலும், அதில் நீராடினாலும் பாவங்கள் நீங்கிவிடும், வேண்டுதல் சட்டென்று நிறைவேறும் என்றும் சொல்கிறார்கள்.

    இக்கோவில் கருவறை மற்ற கோவில்களை போன்று அல்லாமல் பெரிய அளவில் ஐந்து தெய்வத்திரு உருவங்களின் இருப்பிடமாக காணப்படுகிறது. மூலவரான முருகப்பெருமானுக்கு என தனியாக கருவறை இல்லாமல், பாறையில் இடது புறம் முருகப் பெருமான் தெய்வானையுடன் திருமண கோலத்தில் காட்சி தர... அவர்களை அடுத்து, பக்கத்தில் பிற தெய்வ உருவங்கள் உள்ளன. அதாவது, முருகப் பெருமானின் திருமணக்கோலத்தை அனைத்து தெய்வங்களும் காணுமாறு இங்குள்ள கருவறை அமைந்துள்ளது.

    கருவறையின் இடது புறத்தில் கிழக்கு நோக்கியவாறு மலையை குடைந்து சத்திய கிரீசுவரர் என்னும் பெயர் கொண்டவராக சிவபெருமான் லிங்கத் திருமேனியுடன் அருள் பாலிக்கிறார்.

    இக்கோவில் மூலவரை, பாறையினை குடைந்து உருவாக்கி உள்ளதால், அதாவது தனியாக சிலை வடித்து வைக்காத காரணத்தால், இந்த மூலவருக்கு அபிஷேகம் செய்வது கிடையாது. எண்ணெய், புனுகு மட்டுமே சாத்தப்படுகிறது. அதேநேரம், இந்த வேலவனின் கையில் உள்ள வேலுக்கு மட்டுமே அபிஷேகம் உள்ளிட்ட மற்ற எல்லாவற்றையும் செய்கிறார்கள்.

    கருவறையில் முருகப் பெருமான் காலடியில் யானை ஒன்று காணப்படுகிறது. இது, இந்திரனுடைய ஐராவதம் என்றும், இந்திரனின் மகள் என்பதால் தெய்வயானையைப் பிரிய மனமில்லாது முருகனுக்குத் தொண்டாற்ற அது வந்தது என்றும் கூறுகிறார்கள்.

    கருவறையில் முருகப் பெருமானை வழிபட்டுவிட்டு, இடது புறம் உள்ள வாயில் வழியாக கீழே இறங்கினால் கீழ்ப் பகுதியில் குகைக்கோவில் ஒன்று அமைந்துள்ளது. அங்கே அன்னபூரணி, உலக உயிர்களை உணவு அளித்துக் காக்கும் தெய்வமாக காட்சித் தருகிறாள்.

    இந்த நிகழ்வும் கூட மூலாதாரத்துடன் தொடர்புடையது தான். மூலாதார சக்கரத்திற்கு உரிய தேவதை ஸ்ரீ கணேசர். யானைத் தலையைக் கொண்ட குழந்தை. இவர் குழந்தை உள்ளம் கொண்டவர். 'குண்டலினி' என்னும் கவுரி மாதாவை காவல் காத்து வருகிறார். இவர் தான் குண்டலினி மாதாவை விழிப்பு நிலை அடைய வைக்கிறார்.

    இவருடைய கோபக்கனல் தான் வெப்பக்காற்றாக பரவி நரம்பு மண்டலங்கள் மூலமாக எதிர் மறை சக்திகள் நுழையும் போது கைகளில் வெளிப்படுகிறது. எல்லா தடைகளையும் நீக்க கூடிய தெய்வமாக விளங்குகிறார்.

    இவர் தான் எல்லாக் கணங்களுக்கும் அரசனாக இருந்து ஆட்சி செய்கிறார். இத்தடைகளை நீக்கினால் தான் நாம் பரிபூரணத்துவம் பெற முடியும்.

    கணேசரின் ஞானம் மிகவும் பரி பூரணமான ஞானமாகும். அறிவுகளுக்கு எல்லாம் இதயம் போன்றவர். (உண்மையான பொருளை அறிந்து கொள்ளும் திறன் ) கணேஷர் தெய்வ குழந்தை ஆதலால் விளையாட்டுத் தன்மையும், பேரானந்தமமும், கொண்ட குழந்தையாக விளங்குகிறார். அன்பே வடிவானவராகவும் விளங்குகிறார்.

    கோவில் சிறப்புகள்:

    முருகப் பெருமான் தெய்வயானையை திருமணம் செய்து கொண்ட தலம் இது என்பதால், இந்த தலத்தில் திருமணம் செய்து கொள்வது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    மூலாதாரச் சக்கரம் பிறப்பு உறுப்புகள் , கழிவு உறுப்புகள் ஆகியவற்றைப் பாதுகாக்கின்றன. இது மக்களின் பாலுணர்வை வெளிப்படுத்தும் சக்கரம் எனலாம்.

    பாலுணர்வு என்பது மிகவும் மென்மையானது. இது அன்பை வெளிப்படுத்தக் கூடிய ஸ்தூல சரீர உணர்வே ஆகும் . இதை திருமண பந்தத்தின் மூலம் புனிதத் தன்மையுடன் வெளிப்படுத்த வேண்டும் . பிறப்பு - இறப்பு இதன் மூலம் செயல்படுகிறது .

    சமநிலையற்ற பாலுணர்வு நம்மை அடிமைப்படுத்துகிறது. ஆன்ம தரிசனம் பெற்றவர்கள் சரியான சமநிலையில் கற்புடன் வாழ்க்கை நடத்து வதை மூலாதாரமாக கொள்ள வேண்டும் என்று இந்த சக்கரம் நமக்கு உணர்த்துகிறது.

    இக்கோவிலில் மற்ற கோவில்களைப் போன்று சுற்றுப் பிரகாரங்கள் கிடையாது. மூலவரை தரிசிக்க வேண்டும் என்றால் படிக்கட்டுகள் வழியாக மேலே... மேலே... என்று ஏறிக்கொண்டே போக வேண்டும். அத்துடன், கருவறை, மூலவர், உற்சவர் ஆகியோரை வலம் வருவதும் இங்கு முடியாது.

    இக்கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் செய்தால் செல்வம் பெருகி வாழ்வில் வளம் சேரும் என்பது நம்பிக்கை. அதனால், செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானை நினைந்து வீட்டில் தயிர் சாதம் செய்து இங்கே கொண்டு வந்து ஏழை மக்களுக்கு வழங்குவதைப் பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    விழாக்கள் விவரம்:

    தைப்பூசம், கார்த்திகைத் திருநாள், தெய்வயானையை மணந்து கொண்ட பங்குனி உத்திர நாள் ஆகியவை சிறப்பான விழாக்களாக இங்க கொண்டாடப்படுகின்றன.

    மேலும், இந்த குன்றத்து முருகப் பெருமான் உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவில் அன்னை மீனாட்சி திருக்கல்யாணத்தை காண மதுரை சென்று திரும்புவதும் முக்கிய விழாவாகும்.

    திருக்கார்த்திகை தீபம் அன்று இங்குள்ள குன்றின் உச்சியில் ஏற்றப்படும் பிரம்மாண்ட தீபத்தை சுற்று வட்டார மக்கள் கண்டு தரிசனம் செய்வது மறக்க முடியாத நிகழ்ச்சியாகும்.

    Next Story
    ×