search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகர்கோவில் அருகே தபால் ஊழியர் வீட்டில் ரூ.90 ஆயிரம் கொள்ளை
    X

    நாகர்கோவில் அருகே தபால் ஊழியர் வீட்டில் ரூ.90 ஆயிரம் கொள்ளை

    நாகர்கோவில் அருகே தபால் ஊழியர் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த ரூ.90 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலை அடுத்த கீழ பெருவிளையை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 57). நாகராஜன், வெட்டூர்ணி மடத்தில் உள்ள தபால் நிலையத்தில் ஊழியராக உள்ளார். சம்பவதன்று இவர் காலையில் வீட்டில் இருந்து வேலைக்கு சென்றுவிட்டார். அதன்பின்பு அவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார்.

    நாகராஜன், அன்று வேலை முடிந்து உறவினர் வீட்டிற்கு சென்று மனைவியை அழைத்து கொண்டு மாலையில் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது, படுக்கை அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த பொருள்கள் தரையில் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த ரொக்க பணம் ரூ.90 ஆயிரம் கொள்ளை போயிருந்தது.

    இதுபற்றி நாகராஜன், ஆசாரிபள்ளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜா மற்றும் போலீசார் நாகராஜன் வீட்டிற்கு சென்று விசாரித்தனர்.

    வீட்டில் நாகராஜன் மற்றும் அவரது மனைவி இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் வீடு புகுந்து பணத்தை கொள்ளை அடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

    அவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க கைரேகை நிபுணர்களும் அங்கு சென்று சோதனை நடத்தினர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் சென்று நின்று விட்டது. எனவே நாகராஜன் வீட்டில் கொள்ளை அடித்தவர்கள் அப்பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×