search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெங்கையாநாயுடு"

    டெல்லி மேல்-சபையில் அகாலி தளம் சார்பில் நரேஷ்குஜ்ரால் துணை தலைவர் பதவிக்கு நிறுத்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. #VenkaiahNaidu

    புதுடெல்லி:

    டெல்லி மேல்-சபை துணைத் தலைவராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.கே.குரியன் பதவி காலம் கடந்த மாதம் முடிவடைந்தது. அதன் பிறகு துணைத் தலைவர் பதவி காலியாகவே உள்ளது.

    மேல்-சபை தலைவராக இருக்கும் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு சபையை முழு நேரமும் நடத்தி வருகிறார். இதனால் அவருக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. எனவே நடப்பு பாராளுமன்ற கூட்டத் தொடரிலேயே மேல்-சபை துணைத் தலைவர் தேர்தலை நடத்த வேண்டும் என்று விரும்புகிறார்.

    கடந்த ஜூலை மாதம் 18-ந்தேதி தொடங்கிய பாராளுமன்ற கூட்டம் வருகிற 10-ந்தேதியுடன் முடிவடைகிறது. எனவே அடுத்த வாரம் துணைத் தலைவர் தேர்தல் நடை பெறலாம் என்று தெரிகிறது.

    பா.ஜனதா தனது கூட்டணி கட்சிகளான அகாலி தளம் அல்லது பிஜு ஜனதா தளம் கட்சிக்கு விட்டுத்தரலாம் என்று தெரிய வருகிறது.

    அகாலி தளம் சார்பில் நரேஷ்குஜ்ரால் துணை தலைவர் பதவிக்கு நிறுத்தப்படலாம். அல்லது பிஜு ஜனதர தளத்துக்கு ஒதுக்கப்பட்டால் அக்கட்சியின் பிரசன்னா ஆச்சார்யா நிறுத்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    மேல்-சபையில் பா.ஜன தாவுக்கு அதிக எம்.பி.க்கள் இருந்தாலும் எதிர்க் கட்சி கூட்டணி எம்.பி.க்கள் எண்ணிக்கை 113 ஆகவும், பா.ஜனதா கூட்டணி எம்.பி.க்கள் எண்ணிக்கை 95 ஆகவும் உள்ளது. 32 எம்.பி.க்கள் நடுநிலை வகிக்கிறார்கள். அவர்கள் ஆதரவை பெறுவதில் பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது.

    தேர்தல் அறிவிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது. #VenkaiahNaidu

    தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடுவை சந்தித்ததற்கு கரூர் காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். #thirunavukkarasar

    கரூர்:

    தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல் இருந்து வருகிறது. இந்தநிலையில் கரூரில் நடந்த காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் அக்கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    கரூர் மாவட்டம் தாந் தோன்றி வட்டார காங்கிரஸ் கமிட்டியின் செயல்வீரர்கள் கூட்டம் வெள்ளியணை பகு தியில் நடந்தது. கூட்டத்திற்கு தாந்தோன்றி வட்டார தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். ஐ.என்.டி.யு.சி. மாநில பொது செயலாளர் அம்பலவாணன், பட்டதாரிகள் அணி மாநில துணை தலைவர் லூர்துசாவியோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினர் பேங்க் சுப்பிரமணியன், கரூர் நகர தலைவர் ஆர்.ஸ்டீபன் பாபு, வட்டார தலைவர் ஆடிட்டர் ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. ராம நாதன், மாவட்ட செயலாளர் சுரேகா பாலசந்தர், துணை தலைவர் சின்னையன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர் களாக கலந்து கொண்டு பேசினர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    ராணுவ விமானத்தை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த பயன்பாட்டுக்காக, மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் அனுப்பி வைத்தது கண்டனத்துக்குரியது. எனவே அவர்கள் இருவரும் பதவி விலக வேண்டும்.

    கரூர் அருகே ஜேடர் பாளையத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டி வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க வேண்டும். இதன் மூலமாக பஞ்சப்பட்டி ஏரி, தாதம்பாளையம், வெள்ளியணை ஆகிய ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு வந்து அப்பகுதி மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.

    தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடுவை சந்தித்தது காங்கிரஸ் தொண்டர்களுக்கு வருத்தம் அளிக்கிறது. மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சாய்விமல் உள் ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #thirunavukkarasar

    அமித்ஷா வந்த போது கறுப்பு கொடி காட்டியதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வெங்கையா நாயுடு வருகையை ஒட்டி விஜயவாடா விமான நிலையத்தில் 55 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. #VenkaiahNaidu #APSpecialStatus

    விஜயவாடா:

    ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு தெலுங்கு தேசம் கட்சி போராடி வருகிறது. மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்க மறுத்ததால் பா.ஜனதாவுடனான கூட்டணியை தெலுங்கு தேசம் முறித்துக் கொண்டது. மத்திய மந்திரி சபையில் இருந்து தெலுங்கு தேசம் மந்திரிகளும் விலகினார்கள்.

    இந்த நிலையில் பா.ஜனதா தலைவர் அமித்ஷா திருப்பதிக்கு சாமி கும்பிட வந்த போது நேற்று முன்தினம் கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர். பாதுகாப்பு படையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினார்கள்.

    அமித்ஷாவுக்கு பின்னால் வந்த வாகனங்கள் மீது கல் வீசப்பட்டதில் பா.ஜனதா தலைவர் கோலா ஆனந்த் கார் கண்ணாடி உடைந்தது. அவர் காரில் இருந்து இறங்கி தெலுங்கு தேசம் தொண்டர்களுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். போலீசார் விரைந்து சென்று தெலுங்கு தேசம் தொண்டர்களை கைது செய்தனர்.


    அமித்ஷாவுடன் வந்த பா.ஜனதா தலைவர் கார் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ஆந்திரா வரும் தலைவர்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்க போலீசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு வருகிற 21-ந்தேதி ஆந்திர மாநிலம் விஜயவாடா வருகிறார். அங்கு 22-ந்தேதி தேசிய பேரிடர் மேலாண்மை வாரியத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். கண்ணாவரம் அருகே கொண்டபாவுளுரு கிராமத்தில் மாணவர்கள் விடுதியை திறந்து வைக்கிறார்.

    இதற்காக விஜயவாடா வரும் வெங்கையாநாயுடுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. விஜயவாடா விமான நிலையம் அமைந்துள்ள கண்ணாவரம் பகுதியில் கடந்த 11-ந்தேதி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஜூலை 4-ந்தேதிவரை 55 நாட்களுக்கு தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று விஜயவாடா போலீஸ் கமி‌ஷனர் கவுதம் சவாங் தெரிவித்தார்.

    மேலும் தடையை மீறி 4 பேருக்கு மேல் கூடினால் கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    சமீபத்தில் பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்த போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸ் பாதுகாப்பை மீறி விமான நிலையத்துக்குள் புகுந்து கறுப்பு கொடி காட்டினார்கள்.

    அது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்கவும், அமித்ஷா வந்த போது கறுப்பு கொடி காட்டியதாலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக விஜயவாடா விமான நிலையத்தில் 55 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. #VenkaiahNaidu #APSpecialStatus

    ×